திமுக ஆட்சியை மாற்ற வேண்டியது எங்கள் கடமை: தா.பாண்டியன்
காட்பாடி: மக்களவைத் தேர்தலின்போது அதிமுகவுடன் ஏற்பட்ட கூட்டணி நீடிக்கிறது. புதிய கட்சிகள் கூட்டணியில் சேர்ந்து வருகின்றன. திமுக ஆட்சியை மாற்ற வேண்டியது எங்கள் கடமை என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் தா.பாண்டியன் கூறினார்.
நிருபர்களிடம் பேசிய அவர், பெட்ரோல், டீசல் விலைகளை எண்ணெய் நிறுவனங்களே தீர்மானிக்கலாம் என மத்திய அரசு கூறிவிட்டதால், இவற்றின் விலை இன்னும் சில நாள்களில் மீண்டும் உயரவுள்ளது.
மத்திய அரசின் தவறான பொருளாதார கொள்கையால் விலைவாசி உயர்ந்துள்ளது. ஆனால் பணவீக்கம் இல்லை என்ற பொய்யான தகவலை பரப்பி வருகின்றர்.
1.5 கோடி பேர் குடியிருப்பு மனை இல்லாமல் குடிசையில் வாழ்வதாக தமிழக அரசு ஒப்புக் கொண்டுள்ளது. இவர்களுக்கு கணக்கெடுப்பு நடத்தி மனை வழங்க 7 ஆண்டுகள் ஆகும் என்று முதல்வர் கூறியுள்ளார்.
தற்போது குடிசையில் வசிப்பவர்களுக்கு, அவரவர் வாழும் இடங்களுக்கான பட்டாவை இந்த ஆண்டுக்குள் வழங்க வேண்டும்.
தமிழகத்தில் கனிம வளங்கள் கொள்ளை போகின்றன. தமிழ்நாடு அரசு கனிம வள நிறுவனம் இப்போது செயலற்று கிடக்கிறது.
2006ம் ஆண்டு தமிழை உயர் நீதிமன்ற வழக்கு மொழியாக தமிழக சட்டப் பேரவையில் அறிவித்து விட்டு, இதுவரை நடைமுறைக்கு கொண்டு வர முயற்சிகள் மேற்கொள்ளவி்ல்லை.
மக்களவைத் தேர்தலின்போது அதிமுகவுடன் ஏற்பட்ட கூட்டணி இப்போதும் நீடிக்கிறது. புதிய கட்சிகள் கூட்டணியில் சேர்ந்து வருகின்றன. திமுக ஆட்சியை மாற்ற வேண்டியது எங்கள் கடமை.
தமிழ்நாட்டில் ஜனநாயகத்தை மீட்க சக்தி உள்ள வலிமையான கூட்டணியை உருவாக்குவதே எங்கள் கட்சியின் நோக்கமாகும் என்றார்.
பின்னர் இந்திய கம்யூனிஸ்ட் பொதுக் கூட்டத்தில் பேசிய அவர்,
இலங்கையில் பல லட்சம் ஈழத் தமிழர்களை இலங்கை ராணுவம் சுட்டுக் கொன்றதை எந்த ஊடகமும் படம் பிடித்து வெளிச்சம் போட்டு காட்டவில்லை. 4 .5 லட்சம் தமிழர்கள் வாழ்ந்த பகுதியில் சுட்டுக் கொல்லப்பட்டவர்களை புதைக்க வழியின்றி பருந்துகள் கொத்தித் தின்றன. 40,000 தமிழர்கள் ஒரே நாளில் கொல்லப்பட்டனர்.
2வது உலகப் போரை விட இது கொடூரமானது. ஆயுதம் வழங்கப்படும் இந்திய ராணுவ படையின் துணையோடும் அவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
இந்தியாவில் 100 கோடி பேர் உள்ளனர். தமிழ்நாட்டில் 6 கோடி பேர் உள்ளனர். இலங்கையில் இரண்டரை கால் கோடி தமிழர்கள் உள்ளனர். எதற்கும் இலங்கை பயப்படவில்லை. நம்முடை பலவீனத்தை யோசிக்க வேண்டும். வீரத்தை தன்மானத்தை பண்புகளை நாம் இழந்து வருகிறோம்.
தமிழகத்தில் மணல் கொள்ளை அதிகரித்துள்ளது. வருங்காலம் அங்கே புதையுண்டு போகிறது. தமிழ்நாட்டை கூறு போட்டு கொண்டு இருக்கிறார்கள். தமிழ்நாட்டில் நிர்வாகம் சீர்குலைந்து விட்டது.
கொலை செய்தாலும் தப்பித்து கொள்ளலாம். தனியார் நிறுவனங்களின் போலி மதுபாட்டில்கள் அரசு அனுமதி பெற்ற பார்களில் விற்கப்படுகின்றன என்றார்.