வருமான வரி செலுத்துவோருக்கு சமையல் எரிவாயு விலையை உயர்த்த திட்டம்?
இந்தியாவில் சுமார் 12 கோடி வீடுகளில் சமையல் எரிவாயு இணைப்பு உள்ளது. இவர்களுக்கு மத்திய அரசு மானிய விலையில் சமையல் கியாஸ் சிலிண்டர்களை வழங்கி வருகிறது.
உணவு, எரிபொருள் மற்றும் உரங்களுக்கு மத்திய அரசு பல ஆயிரம் கோடி ரூபாயை மானியமாக வழங்கி வருகிறது. கடந்த ஆண்டும் மட்டும் 1 லட்சத்து 31 ஆயிரத்து 25 கோடி ரூபாயை மானியமாக மத்திய அரசு வழங்கியது.
இந்த தொகையை ஆண்டுக்கு ஆண்டு கொஞ்சம், கொஞ்சமாக குறைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. 2010-11ம் நிதி ஆண்டில் மானிய தொகையை 1 லட்சத்து 16 ஆயிரத்து 224 கோடி ரூபாயாக குறைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக பெட்ரோல்-டீசல் விலை நிர்ணயம் செய்யும் உரிமையை கடந்த ஜூன் மாதம் எண்ணை நிறுவனங்களிடமே மத்திய அரசு ஒப்படைத்தது. இதனால் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்தது.
தற்போது பெட்ரோல் விலையை லிட்டருக்கு 50 காசும், டீசல் விலையை லிட்டருக்கு 25 காசும் உயர்த்த எண்ணை நிறுவனங்கள் தீர்மானித்துள்ளன. சமையல் எரிவாயு விலை நிர்ணய உரிமையையும் விட்டுக்கொடுக்க கடந்த ஜூன் மாதமே மத்திய அரசு ஆலோசித்தது. ஆனால் மக்கள் அதிருப்தி அடையக்கூடும் என்பதால் தற்காலிகமாக தள்ளிப்போட்டது.
இதற்கிடையே மானிய விலையில் கொடுக்கப்படும் சமையல் எரிவாயு சிலிண்டர்களை ஏழைகள் மற்றும் கிராமப்புறத்தில் வசிப்பவர்களுக்கு மட்டும் இனி கொடுக்கலாம் என்று மத்திய அரசு முடிவெடுத்துள்ளது.
வருமான வரி செலுத்துபவர்களுக்கு வழங்கப்படும் எரிவாயுவுக்கு இனி அதிக விலை நிர்ணயிக்கலாம் என்ற கொள்கை முடிவு எடுக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஏழைகளுக்கும், கிராமப்புறத்தில் வசிப்பவர்களுக்கு மட்டும் மானிய விலையில் கொடுத்துவிட்டு, நகர் புறங்களில் வசிப்பவர்களுக்கும், வருமான வரி செலுத்துபவர்களுக்கும் எரிவாயு விலை உயர்த்தப்படுகிறது.