மதுரையில் 5 ஆண்டுகளில் இல்லாத ஒரே நாளில் 13 செ.மீ. கன மழை
மதுரை: மதுரையில் நேற்று முன் தினம் ஒரே நாளில் 13.2 செ.மீ. அளவுக்கு மிக பலத்த மழை பெய்துள்ளது.
மதுரை மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் இரவு முழுவதும் பெய்து கொண்டே இருந்தது. 13.2 செ.மீ. அளவுக்கு மழை பெய்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கடந்த 5 ஆண்டுகளில் ஒரே நாளில் இந்த அளவுக்கு ந்தப் பகுதியில் மழை பெய்தது இல்லை என்பது குறிப்பிடத்தக்க்கது.
இந்த மழையின்போது, மதுரையை அடுத்த சின்னையாபுரத்தில் சுப்பிரமணி (30) என்பவர் தனது வீட்டின் மொட்டை மாடியில் தேங்கி இருந்த தண்ணீரை அப்புறப்படுத்திக் கொண்டிருந்தபோது இடி தாக்கி உயிரிழந்துள்ளார்.
அதே போல பழனி மற்றும் அதன் சுற்றுப் பகுதிகளிலும் 12 செ.மீ. மழை பெய்துள்ளது.
பழனி அருகே கரடிக்கூட்டம் கிராமத்தில் உச்சிகாளியம்மன் கோவில் மீது இடி விழுந்ததில் அதன் கோபுரத்தின் மேல் பகுதியில் வலப்புற பகுதி இடிந்து விழுந்தது. கோபுரத்தின் கீழ் பகுதியிலும் விரிசல் ஏற்பட்டுள்ளது.
மின்னல் காரணமாக அந்த கிராமத்தில், 60 வீடுகளில் டிவிக்கள் சேதமடைந்தன.
அதே போல ஈரோடு மாவட்டத்தில் கோபி, சென்னிமலை, பெருந்துறை, கொடுமுடி, பவானி, பவானிசாகர், சத்தியமங்கலம் போன்ற ஊர்களிலும் மிக பலத்த மழை பெய்து உள்ளது.
மேலும் நெல்லை மாவட்டத்தில் ஆலங்குளம், செங்கோட்டை, சங்கரன்கோவில், தென்காசி, ஆழ்வார்குறிச்சி, பொட்டல் புதூர், திருவேங்கடம் ஆகிய பகுதிகளிலும்,
குமரி மாவட்டம் பூதபாண்டி, செண்பகராமன் புதூர், நாகர்கோவில் ஆகிய இடங்களிலும் கன மழை பெய்தது.
தமிழகம், புதுவையில் இன்றும் மழை பெய்யும்:
இதற்கிடையே தமிழகம், புதுவையில் சில இடங்களில் இன்றும் இடி, மின்னலுடன் மழை பெய்யக் கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications