கோவை, சேலம், தூத்துக்குடி மாவட்ட அதிமுக செயலாளர்கள் மாற்றம்-ஜெ அதிரடி
இது தொடர்பாக அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில்,
கோவை மாநகர் மாவட்ட அதிமுக செயலாளர் செ.ம.வேலுசாமி எம்.எல்.ஏ. இன்று முதல் அவர் வகித்து வரும் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்படுகிறார். அவருக்குப் பதிலாக கோவை மாநகர் மாவட்ட செயலாளராக மலரவன் எம்.எல்.ஏ. நியமிக்கப்படுகிறார்.
கோவை மாநகர் மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற தலைவர் பொறுப்பில் இருக்கும் தாமோதரன், மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் பொறுப்பில் இருக்கும் சிங்கை பாலன் ஆகியோர் அவரவர் வகிக்கும் பொறுப்புகளில் இருந்து விடுவிக்கப்படுகிறார்கள்.
கோவை மாநகர் மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற தலைவராக மருதாசலம், கோவை மாநகர் மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற செயலாளராக செ.ம.வேலுசாமி எம்.எல்.ஏ. இணை செயலாளராக சிங்கை பாலன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். கோவை மாநகர் மாவட்ட விவசாயப் பிரிவு மாவட்ட தலைவராக தாமோதரன் நியமிக்கப்பட்டுள்ளார்.
சேலம்...:
அதே போல சேலம் புறநகர் மேற்கு மாவட்ட அதிமுக அவைத்தலைவர் பொறுப்பில் இருக்கும் சின்னக்கண்ணு, மாவட்ட செயலாளர் பொறுப்பில் இருக்கும் சரவணன், துணை செயலாளர் பொறுப்பில் இருக்கும் கலையரசன் ஆகியோர் இன்று முதல் அவரவர் வகித்து வரும் பொறுப்புகளில் இருந்து விடுவிக்கப்படுகிறார்கள்.
இது போல் சேலம் புறநகர் மேற்கு மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் செல்வராஜ், அண்ணா தொழிற் சங்கச் செயலாளர் சித்துராஜ், இளைஞர்-இளம் பெண்கள் பாசறை செயலாளர் சுதர்சனம் ஆகியோர் அவர்கள் வகிக்கும் பொறுப்புகளில் இருந்து விடுவிக்கப்படுகிறார்கள்.
அவர்களுக்குப் பதிலாக சேலம் புறநகர் மேற்கு அதிமுக மாவட்ட அவைத்தலைவராக குருசாமி, மாவட்ட செயலாளராக முன்னாள் எம்.பி. எடப்பாடி பழனிசாமி ஆகியோர் நியமிக்கப்படுகிறார்கள்.
சேலம் புறநகர் மேற்கு மாவட்ட ஜெயலலிதா பேரவை மாவட்டச் செயலாளராக காங்கேயன் என்கிற மசியப்பன், அண்ணா தொழிற் சங்க மாவட்டச் செயலாளராக ராமசாமி, இளைஞர்-இளம் பெண்கள் பாசறை மாவட்டச் செயலாளராக விஜயகுமார் ஆகியோரும் இன்று முதல் நியமிக்கப்பட்டுள்ளனர்.
தூத்துக்குடி...:
தூத்துக்குடி மாவட்ட அதிமுக செயலாளர் பொறுப்பில் இருக்கும் பள்ளத்தூர் முருகேசன், தூத்துக்குடி மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் பொறுப்பில் இருக்கும் சண்முகநாதன் ஆகியார் இன்று முதல் அவரவர் வகித்து வரும் பொறுப்புகளில் இருந்து விடுவிக்கப்படுகிறார்கள்.
தூத்துக்குடி மாவட்ட அதிமுக செயலாளர் பொறுப்பில் முன்னாள் அமைச்சர் சண்முகநாதன் இன்று முதல் நியமிக்கப்படுகிறார். தூத்துக்குடி மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற இணைச் செயலாளர் பொறுப்பில் பள்ளத்தூர் முருகேசன் இன்று முதல் நியமிக்கப்படுகிறார்.
இவ்வாறு ஜெயலலிதாவின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
ஜெயலலிதா சிறுதாவூர் வருகை:
இந் நிலையில் ஜெயலலிதா திடீரென சிறுதாவூர் பங்களாவுக்கு வந்துள்ளார். கடந்த ஆகஸ்ட் மாதம் சிறுதாவூர் வந்த அவர், 2 மணி நேரம் மட்டுமே இருந்து விட்டு சென்னை திரும்பினார். இந்நிலையில் இன்று வந்துள்ள அவர் 10 நாட்கள் வரை சிறுதாவூரில் தங்குவார் என்று கூறப்படுகிறது.
அதிமுக முன்னாள் எம்எல்ஏ தலைமறைவு:
இதற்கிடையே வரதட்சணை புகார் தொடர்பாக போளூர் தொகுதி முன்னாள் அதிமுக எம்எல்ஏ வேடியப்பன் தலைமறைவாகி உள்ளார்.
1991-96ம் ஆண்டு போளூர் தொகுதி எம்எல்ஏவாக இருந்தவர் வேடியப்பன். இவரது மகன் தண்டபானிக்கும் சத்யா என்பவருக்கும் கடந்த 2007ம் ஆண்டு தி!ருமணம் நடந்தது.
இந் நிலையில் சத்யா போளூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வேடியப்பன் மீது புகார் அளித்துள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய சத்யா,
என் கணவர், மாமனார், மாமியார் ஆகியோர் 100 சவரன் நகை, கார், ஜே.சி.பி. இயந்திரம் வேண்டும் என வரதட்சனை கேட்டு என்னை அடித்து துன்புறுத்தி வருகின்றனர். இது குறித்து போலீசில் புகார் கொடுத்துள்ளேன் என்றார்.
இந்தப் புகாரை ஏற்ற அனைத்து மகளிர் காவல்நிலைய போலீசார் வேடியப்பனை தேடி அவரது வீட்டிற்கு சென்றனர். ஆனால் அவரது வீடு பூட்டப்பட்டிருந்தது. வேடியப்பன் மற்றும் அவரது மனைவி சந்தியா ஆகியோரைக் காணவில்லை.
தலைமறைவாகிவிட்ட அவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.