சென்னை மாநகராட்சி அதிரடி-ஒரே நாளில் ரூ. 200 கோடி சொத்துக்கள் மீட்பு
சென்னை: சென்னை மாநகராட்சிக்குச் சொந்தமான, ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட ரூ.200 கோடி மதிப்பிலான 52 கிரவுண்டு நிலம் இன்று ஒரே நாளில் மீட்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி மேயர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.
சென்னை மாநகராட்சிக்குச் சொந்தமான ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட சொத்துக்களை மீட்டு வருகிறது மாநகராட்சி நிர்வாகம். அதன்படி இன்று நடந்த வேட்டையில் 14 இடங்களில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்த ரூ. 200 கோடி மதிப்பிலான 52 கிரவுண்டு இடத்தை மாநகராட்சி மீட்டுள்ளது.
அதில் முக்கியமானது திமுக தலைமைக் கழக அலுவலகமான அண்ணா அறிவாலயம் அருகே உள்ள ஹயாத் நிறுவனத்திற்குச் சொந்தமான எட்டரை கிரவுண்ட் நிலமாகும்.
இதுகுறித்து மேயர் சுப்பிரமணியன் கூறுகையில்,
கடந்த 4 ஆண்டுகளில் சென்னை மாநகராட்சிக்கு சொந்தமான ரூ.3,500 கோடி மதிப்பிலான நிலங்கள் மீட்கப்பட்டு பொதுமக்களின் பயன்பாட்டிற்காக பூங்காக்கள், விளையாட்டு திடல்கள் அமைக்கப் பட்டது.
தொடர்ந்து அடையாறு, திருவான்மியூர், ராஜா அண்ணாமலைபுரம், தரமணி, வேளச்சேரி உள்ளிட்ட 26 இடங்களில் ரூ.300 கோடி மதிப்பிலான நிலம் மீட்கப்பட்டு பூங்காக்கள் விளையாட்டு திடல்கள் அமைப்பதற்கான ஒப்பந்தம் கோரப்பட்டுள்ளது. இன்று தி.நகர், தேனாம்பேட்டை, விருகம்பாக்கம், சாலிகிராமம் உள்ளிட்ட 14 இடங்களில் 52 கிரவுண்ட் நிலம் தனியாரிடமிருந்து சென்னை மாநகராட்சி கையகப்படுத்தி உள்ளது. இவற்றின் மதிப்பு ரூ.200 கோடியாகும்.
தேனாம்பேட்டையில் (ஹயாத் நிறுவனம்) கையகப்படுத்திய எட்டரை கிரவுண்ட் நிலம் சுமார் 50 கோடி மதிப்புடையதாகும். இந்த இடத்தில் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக அழகியபூங்கா, சென்னை மாநகராட்சியால் அமைக்கப்படும். தற்போது மழை பெய்து வருவதால் சென்னை மாநகராட்சி ஏற்கனவே 30க்கும் மேற்பட்ட பல்வேறு துறைகளுடன் ஆலோசனை நடத்தி மழைக்கால நடவடிக்கை குறித்து ஆய்வு செய்துள்ளது.
தாழ்வான பகுதிகள், சுரங்கப்பாதைகள் போன்றவற்றில் மழை நீர் அகற்றுவதற்காக 100 மோட்டார் பம்புகள் தயார் நிலையில் வைக்கப் பட்டுள்ளது. ஜவஹர்லால் நேரு தேசிய நகர்ப்புற புனரமைப்பு திட்டத்தின் கீழ் ரூ.1448 கோடி மதிப்பீட்டில் மழை நீர் வடிகால்வாய்கள் சீரமைக்கும் பணிகளும், புதிதாக கட்டுமான பணிகளும், நீர் நிலைகள் சீரமைக்கும் பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. எதிர் வரும் பருவ காலத்திற்கேற்ப அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ள மாநகராட்சி தயார் நிலையில் உள்ளது என்றார்.












Click it and Unblock the Notifications