ஏமனை மீட்க புதிய ராணுவம் அமைப்பு-அல் கொய்தா அறிவிப்பு
துபாய்: ஏமன் நாட்டை ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து மீட்கவும், மக்களைக் காக்கவும் அன் அபயன் ஆர்மி என்ற புதிய படை அமைக்கப்பட்டுள்ளதாக ஏமன் நாட்டுக்கான அல் கொய்தா அமைப்பின் தாக்குதல் பிரிவு தலைவர் குவாசிம் அல் ரிமி கூறியுள்ளார்.
இதுகுறித்து ஏமன் அல் கொய்தா அமைப்பு இணையதளத்தில் ஆடியோ டேப் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டிருப்பதாவது...
நாட்டைமீட்கவும், மதத்தைக் காக்கவும் அடன் அபயன் ஆர்மி உருவாக்கப்பட்டுள்ளது. அதன்நடவடிக்கைகளை அமலாக்க தயாராகி வருகிறோம். வீரர்கள் நிறைந்த பூமி ஏமன். இதை மீட்பதே எங்களது லட்சியம்.
புதிய ராணுவத்தின் உருவாக்கம் விரைவில் முடியும். இந்த படையை பலப்படுத்த ஜிஹாதிகளும், அவர்களது ஆதரவாளர்களும் உதவ வேண்டும்.
கடந்த காலங்களில் தெற்கு மற்றும் கிழிக்கு ஏமனில் பாதுகாப்புப் படையினரையும், போலீஸாரையும் தாக்குவதற்கு வெடிகுண்டுகளும், ஸ்னிப்பர்களும் பயன்படுத்தப்பட்டன. இந்தத் தாக்குதல்கள் வெற்றி பெற்றிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.
இருப்பினும் இதை விட மிகப் பெரிய அளவிலான தாக்குதல் திட்டங்களை நாங்கள் வைத்துள்ளோம். அவற்றை விரைவில் வெளியிடுவோம்.
இப்போதைக்கு அதிபர் அலி அப்துல்லா சலேவின் ராணுவத்துடன் நாங்கள் நகர்ப்புறங்களில் நேரடியான மோதலில் ஈடுபடாமல் தவிர்ப்போம். இருப்பினும் மலைப் பகுதிகள், பாலைவனங்கள், கடலோரப் பகுதிகளில் நாங்கள் உறுதியாக இருந்து வருகிறோம்.
அரேபிய தீபகற்பப் பகுதி முழுவதும் ஷரியாவை அமல்படுத்த தீவிரமாக முயன்று வருகிறோம் என்று கூறியுள்ளார் ரிமி.
இந்த ஆடியோ டேப்பின் நம்பகத்தன்மை குறித்துத் தெரியவில்லை.