திமுக அரசைக் கண்டித்து அக். 21ல் சென்னையில் கம்யூ. கட்சிகள் ஆர்ப்பாட்டம்

இதுகுறித்து சிபிஎம் மாநிலச்செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், சிபிஐ செயலாளர் தா.பாண்டியன் ஆகியோர் வெளியிட்டுள்ள கூட்டறிக்கை:
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலத் தலைவர்கள் இன்று (14.10.10) காலை சிபிஐ அலுவலகத்தில் சந்தித்து பேசினர். இச்சந்திப்பின் போது கீழ்க்கண்ட முடிவு எடுக்கப்பட்டது.
நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தில் பணிபுரியும் 13 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஒப்பந்தத் தொழிலாளர்கள் சமவேலைக்கு சம ஊதியம், பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து கடந்த 20 நாட்களுக்கு மேலாக வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
தொழிற்சங்கத் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி சுமூகத் தீர்வை ஏற்படுத்துவதற்கு மாறாக, காவல்துறையைப் பயன்படுத்தி தொழிலாளர்களை அச்சுறுத்தி, போராட்டத்தை அடக்கி, ஒடுக்கும் நடவடிக்கைகளையே என்எல்சி நிர்வாகம் எடுத்து வருகிறது. நீதிமன்ற தீர்ப்புகளைக் கூட நிர்வாகம் செயல்படுத்த மறுத்து வருகிறது. திமுகவின் தொ.மு.சங்கத்தைப் பயன்படுத்தி, தொழிலாளர்களுக்கு விரோதமான ஒப்பந்தத்தை திணிக்க நிர்வாகம் முனைகிறது.
அதேபோல, ஸ்ரீபெரும்புதூர் பாக்ஸ்கான் நிறுவனத்தில் பணிபுரியும் தொழிலாளர்கள் ஊதிய உயர்வு, சங்க அங்கீகாரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி 20 நாட்களுக்கு மேலாக போராடி வருகின்றனர். தொழிற்சங்கத் தலைமையுடன் பேசித் தீர்வு காண்பதற்கு மாறாக 23 தொழிலாளர்களை இடைநீக்கம் செய்து நிர்வாகம் பழிவாங்கியுள்ளது. மேலும் காவல்துறையை ஏவி விட்டு, அடக்குமுறை நடவடிக்கைகளை நிர்வாகம் மேற்கொண்டுள்ளது.
சிஐடியு மாநில பொதுச்செயலாளர் அ. சவுந்தரராசன், இ. முத்துகுமார் உள்ளிட்டு 300க்கும் மேற்பட்ட தொழிலாளர்களை கைது செய்து வேலூர் சிறையில் அடைத்துள்ளது. சிறையிலடைக்கப் பட்டவர்கள் 13.10.2010 அன்று ஜாமீனில் விடுவிக்கப்பட்ட உடனேயே நிர்வாகத்திற்கு ஆதரவாக தமிழக காவல்துறை அ. சவுந்தரராசன், இ.முத்துக்குமார் உள்ளிட்டு 12 பேர் மீது எந்தவித முகாந்தரமுமின்றி பொதுச்சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தாக பொய் வழக்கு புனைந்து மீண்டும் சிறையில் அடைத்துள்ளது.
என்எல்சி நிர்வாகமும், பாக்ஸ்கான் நிர்வாகமும் திமுகவின் தொழிற்சங்கமான எல்.பி.எப்.மும், இணைந்து நின்று தொழிலாளர்கள் ஏற்க மறுக்கும் ஒப்பந்தத்தையும் திணிக்க முயற்சிக்கின்றனர்.
இதுபோல் ஸ்ரீபெரும்புதூர் நோக்கியா செல்போன் தொழிற்சாலை போன்ற பன்னாட்டு தொழில் நிறுவனங்களிலும், தொழிற்சங்க உரிமைகள் மறுக்கப்படுவதும், தொழிலாளர்கள் பழிவாங்கப்படுவதும் இத்தகைய தொழிலாளர் விரோத நடவடிக்கைகளுக்கு தமிழக அரசு உடந்தையாக இருப்பதும் தொடர் நிகழ்வுகளாய் உள்ளன.
டாஸ்மாக் மற்றும் சத்துணவு தொழிலாளர்கள் போராடிய போது, அவர்களை ஒடுக்க காவல்துறையை ஏவிவிட்டது தமிழக அரசு. இத்தகைய தொழிலாளர் விரோத, தொழிற்சங்க விரோத, ஜனநாயக விரோத நடவடிக்கைகளை மார்க்சிளிட் கட்சியும், இந்திய கம்யூனிளிட் கட்சியும் வன்மையாக கண்டிக்கின்றன.
தொழிலாளர்கள் மீதும், தொழிறசங்கத்தலைவர்கள் மீதும் போடப்பட்டுள்ள பொய்வழக்குகளை திருமபப்பெற வேண்டுமென்றும், சிறையில் உள்ள அனைவரையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டுமென்றும், பேச்சு வார்த்தையின் மூலம் தொழிலாளர்களின் கோரிக்கைகள் மீது சுமூகத் தீர்வு காண உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென்றும், ரகசிய வாக்கெடுப்பின் மூலம் தொழிற்சங்க அங்கீகாரம் தீர்மானிக்கப்பட வேண்டுமென்றும் மார்க்சிளிட் கட்சியும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும், தமிழக அரசையும், தொழிலாளர் நலத்துறையையும் வலியுறுத்துகின்றன.
தமிழக அரசின் தொழிலாளர்கள் விரோத, தொழிற்சங்க விரோத, ஜனநாயக விரோத நடவடிக்கைகளை கண்டித்து அக்டோபர் 21 அன்று காலை 10 மணிக்கு சென்னை, மெமோரியல் ஹால் அருகில் மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் தா. பாண்டியன் தலைமையில் பல்லாயிரம் பேர் பங்கேற்கும் பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நடத்துவதென்று தீர்மானிக்கப்பட்டது.
இப்போராட்டத்தில் திமுக அரசின் ஜனநாயக விரோத நடவடிக்கைகளுக்கும் கண்டனம் தெரிவிக்கும் வகையில் தொழிலாளர்களும், உழைப்பாளி மக்களும் பெருந்திரளாக கலந்து கொள்ள வேண்டுமென்று இரு கட்சிகளின் சார்பிலும் அறைகூவி அழைக்கிறோம் என்று தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications