ஒபாமா மும்பை வருகை எதிரொலி-தாஜ் ஹோட்டல் அறைகள் 'ஃபுல்'
மும்பை: அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவின் வருகையைத் தொடர்ந்து மும்பையின் முக்கிய ஸ்டார் ஹோட்டலான தாஜ் மஹால் பாலஸ் ஹோட்டலின் அனைத்து அறைகளையும் அதிகாரிகள் புக் செய்து விட்டனர்.அதிபர் ஒபாமா நவம்பர் முதல் வாரத்தில் இந்தியா வருகிறார். மும்பைக்கும், டெல்லிக்கும் அவர் செல்கிறார். மும்பையில் நவம்பர் 5 மற்றும் 6 ஆகிய இரு நாட்கள் அவர் தங்கவுள்ளார. தாஜ் மஹால் பேலஸ் ஹோட்டலில்தான் அவர் தங்கவுள்ளார்.
இதையடுத்து தாஜ் ஹோட்டலின் அனைத்து அறைகளையும் அதிகாரிகள் புக் செய்து விட்டனர். இந்த ஹோட்டலில் கிட்டத்தட்ட 604 அறைகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
தீவிரவாத தாக்குதலின்போது பெரும் சேதத்தை சந்தித்த ஹோட்டலின் ஹெரிடேஜ் விங் பகுதியில் உள்ள அனைத்து அறைகளையும் புக் செய்துள்ளனராம். அதேபோல மாநாட்டுக் கூடங்கள், ரெஸ்டாரென்டுகளையும் புக் செய்து விட்டனர்.
ஒபாமா இங்கு தங்கியிருக்கும்போது வெளியாட்கள் யாரும் ஹோட்டலுக்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என அரசு அதிகாரிஒருவர் தெரிவித்தார்.
ஹோட்டலுக்குள்ளும், வெளியிலும் பொதுமக்களின் நடமாட்டத்தை கட்டுப்படுத்துமாறு இந்திய அரசை, ஒபாமாவின் பாதுகாப்பு அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளனராம்.
ஒபாமாவுடன் வரும் அதிகாரிகள், தூதுக்குழுவினர் ஓபராய், கிரான்ட் ஹயாட், ஐடிசி கிராண்ட் மராத்தா ஆகிய ஹோட்டல்களில் தங்கவுள்ளனர்.
ஒபாமாவுடன் அவரது அதிகாரப்பூர்வ சமையல்காரர்களும் உடன் வருகின்றனர். இவர்கள் சமைத்து தருவதை மட்டுமே ஒபாமா உள்ளிட்டோர் சாப்பிடுவார்களாம்,.
மும்பை பயணத்தை முடித்துக் கொண்ட பின்னர் நவம்பர் 7ம் தேதி ஒபாமா அமிர்தசரஸ் செல்வார் எனத் தெரிகிறது.
மும்பை பயணத்தின்போது ஒபாமாவின் மனைவி மிஷல், நவம்பர்7ம் தேதியன்று மும்பையின் சிவப்பு விளக்குப் பகுதியான காமாத்திபுராவுக்கு வருவதாக உறுதியலித்துள்ளாராம். இருப்பினும் இதுகுறித்து உறுதியானதகவல் இல்லை. ஒரு என்ஜிஓ அமைப்பு இங்கு வருமாறு மிஷலுக்கு அழைப்பு விடுத்துள்ளதாம்.
நவம்பர்6ம் தேதி பிற்பகல் மும்பை சர்வதேச விமானத்தில் ஒபாமா உள்ளிட்டோருடன் அமெரிக்க அதிபருக்கான சிறப்பு விமானம் தரையிறங்கவுள்ளது. உடன் இரண்டு ஜம்போ ஜெட் விமானங்களும் வருகின்றன.
பின்னர் 40 முதல் 45 கார்களில் ஒபாமா உள்ளிட்டோர் அழைத்துச் செல்லப்படுகின்றனர். இதில் ஒரு காரில் ஒபாமா இருப்பார். ஆனால் அவர் எந்தக் காரில் இருப்பார் என்பது ரகசியமாக வைக்கப்பட்டிருக்குமாம்.
பாகிஸ்தான் தீவிரவாதிகளின் தாக்குதலுக்குள்ளான நரிமன் ஹவுஸ் மற்றும் மணி பவன் ஆகிய இரு இடங்களில் நடைபெறும் நிகழ்ச்சியில் ஒபாமா பங்கேற்கவுள்ளார்.
மும்பை வரும் ஒபாமாவுக்கு மிக பலத்த பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அமெரிக்காவின் பாதுகாப்புப் படையினர் தவிர இந்தியாவின் பாதுகாப்புப் படையினரும், ரா உள்ளிட்ட உளவு அமைப்பினரும் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்புப் பணியில் ஈடுபடவுள்ளனர்.
மும்பையின் மோப்ப நாய்ப் படையுடன், அமெரிக்காவிலிருந்து சிறப்பு நாய்ப் படையும் மும்பைக்கு அழைத்து வரப்படுகிறது.
அமெரிக்க விமானப்படையினர் மற்றும் கடற்படையினரும் ஒபாமா பாதுகாப்புக்காக மும்பை வருகின்றனர்.