கொள்ளையனான மாஜி எம்எல்ஏ ரவிசங்கரிடமிருந்து 150 பவுன் நகைகள் பறிமுதல்
சென்னை: எம்எல்ஏவாக இருந்து கொள்ளையராக மாறிய முன்னாள் திமுக எம்எல்ஏ ரவிசங்கரிடமிருந்து 150 பவுன் திருட்டு நகைகளைப் போலீஸார் பறிமுதல் செய்துள்ளனர். அவர் கூவத்தில் வீசிய துப்பாக்கியை தொடர்ந்து தேடி வருகிறார்கள்.
விளாத்திகுளம் தொகுதியில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோவை எதிர்த்து திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் ரவிசங்கர். பின்னர் அரசியலில் இவர் காணாமல் போனார். இந்த நிலையில், சமீபத்தில் சென்னையில் கொள்ளையில் ஈடுபட முயன்று இவர் சிக்கினார்.
சென்னை அசோக்நகர் பகுதியில் வசித்து வருபவர் வெங்கட்ராகவன். இவரது வீட்டுக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு வருமான வரித்துறை அதிகாரிகள் என்று கூறிக்கொண்டு 2 பேர் வந்தனர். வீட்டில் சோதனையிடுவதாக கூறி 25 சவரன் நகை, ரூ.20 ஆயிரம் ரொக்கப்பணத்தை கொள்ளையடித்துவிட்டு தப்பி ஓட முயன்றனர்.
வெங்கட்ராகவனின் மனைவி வேதவல்லி, மருமகள் ராதா ஆகியோர் துணிச்சலாக செயல்பட்டதன் பேரில், 2 பேரில் ஒருவர் சிக்கினார். அவரைப் பிடித்து போலீஸார் விசாரித்தபோதுதான் அவர் ரவிசங்கர் என்று தெரிய வந்து அதிர்ந்தனர்.
எம்.எல்.ஏவாக இருந்த ஒருவர் கொள்ளையனாக மாறியது தமிழகத்தையே உலுக்கியது. அவருடன் கொள்ளையடிக்க வந்து தப்பிய நபர் தம்பி இளஞ்செழியன் என்று தெரிய வந்தது.
இளஞ்செழியன் தற்போது இலங்கைக்கு ஓடி விட்டதாக கூறப்படுகிறது. ரவிசங்கர் பல்வேறு கொள்ளை, மோசடி போன்றவற்றில் தொடர்பு வைத்திருந்தது போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது.
அவரை 5 நாள் காவலில் எடுத்து போலீஸார் விசாரித்தனர். அதில் 9 குற்றங்களை அவர் ஒப்புக் கொண்டாராம். விசாரணை முடிவடைந்ததைத் தொடர்ந்து நேற்று ரவிசங்கரை போலீஸார் புழல் சிறையில் அடைத்தனர்.
.
இந்த விசாரணையின்போது எங்கெல்லாம் கொள்ளை, மோசடியில் ஈடுபட்டோம் என்பதை ரவிசங்கர் போலீஸாரிடம் தெரிவித்துள்ளார். கொள்ளை நடந்த இடங்களுக்கு நேரில் அழைத்துச் சென்று ரவிசங்கரிடம் விசாரித்தனர். எப்படி கொள்ளை அடித்தார் என்பதையும் நடித்துக் காட்டச் சொல்லி வீடியோவில் படமாக்கிக் கொண்டனர்.
இந்த விசாரணையின்போது 150 பவுன் நகைகள் கைப்பற்றப்பட்டுள்ளன. 9 கொள்ளைச் சம்பவங்களில் இவற்றை கொள்ளையடித்துள்ளனர் ரவிசங்கரும், அவரது தம்பியும்.
இதற்கிடையே, கோவை சாய்பாபா காலனியில் ஒருமுறை ஒரு வீட்டில் ரவிசங்கர் கொள்ளை அடித்துள்ளார். அப்போது நகை, பணத்துடன் கைத்துப்பாக்கியும் அவருக்கு கிடைத்தது. அந்த கைத்துப்பாக்கியையும் சேர்த்து ரவிசங்கர் எடுத்துக் கொண்டார். பின்னர் சென்னைக்கு வந்தபோது ஆங்காங்கு போலீஸ் சோதனை நடத்தப்பட்டதை ரவிசங்கர் அறிந்து கொண்டார்.
இதையடுத்து சேத்துப்பட்டு பகுதியில் கூவம் ஆற்றில் அதை எரிந்து விட்டார். இதைத் தொடர்ந்து அங்கு போலீஸார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். தீயணைப்புத் துறையினர் உதவியுடன் வேட்டை நடந்தது. ஆனால் துப்பாக்கி கிடைக்கவில்லை.
அதை யாரேனும் எடுத்து விட்டனரா அல்லது எங்காவது புதைந்து கிடக்கிறதா என்பது தெரியவில்லை.












Click it and Unblock the Notifications