மகாராஷ்டிர புதிய முதல்வராகப் பதவியேற்றார் பிரிதிவிராஜ் சவான்
மும்பை: மகாராஷ்டிர முதல்வராக பிரிதிவிராஜ் சவான் இன்று பதவியேற்றுக் கொண்டார். துணை முதல்வராக தேசியவாத காங்கிரஸ் கட்சியின் அஜீத் பவார் பதவியேற்றுக் கொண்டார்.
ஆதர்ஷ் அடுக்குமாடிக் குடியிருப்பு விவகாரத்தால் முதல்வராக இருந்த அசோக் சவானை ராஜினாமா செய்தார். இதையடுத்து பிரிதிவிராஜ் சவானை அடுத்த முதல்வராக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தேர்வு செய்தார்.
மத்திய விவசாயத்துறை அமைச்சரும் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவருமான சரத் பவாரின் தீவிர எதிர்ப்பாளரான பிரிதிவிராஜ் இன்று பதவி ஏற்றுக் கொண்டார்.
இந் நிலையில் தேசியவாத காங்கிரஸ் கட்சியும் தனது நிலையை வலுவாக்கிக் கொள்ள வசதியாக துணை முதல்வரை மாற்றியுள்ளது.
சரத் பவாரின் அண்ணன் மகனும், மாநில நீர்வளத்துறை அமைச்சருமான அஜித் பவாரை துணை முதல்வரா தேர்ந்தெடுக்கப்பட்டார். கட்சியின் சட்டசபை கட்சித்தலைவராக அஜித்பவார் முறைப்படி அறிவிக்கப்பட்டார்.
மகாராஷ்டிராவின் 22வது முதல்வர் பிரிதிவிராஜ்
மகாராஷ்டிராவின் 22வது முதல்வராகப் பதவியேற்றுள்ளார் சவான். மேற்கு மகாராஷ்டிரத்தைச் சேர்ந்த பிரிதிவிராஜ் சவான், அம் மாநிலத்தின் முக்கிய ஜாதியான மராட்டா சமூகத்தைச் சேர்ந்தவர். எந்த கெட்ட பெயரும் இல்லாத அரசியல்வாதி. முன்னதாக நேற்று இரவு ஆளுநர் சங்கர நாராயணனை சவானும், அஜீத் பவாரும் சந்தித்து புதிய ஆட்சி அமைக்க உரிமை கோரினர்.
பின்னர் வெளியில் வந்த சவான் செய்தியாளர்களிடம் பேசுகையில், எனக்கு 170 எம்.எல்.ஏக்களின் ஆதரவு உள்ளது. புதிய அரசை அமைக்குமாறு ஆளுநர் எனக்கு உத்தரவிட்டுள்ளார் என்றார்.
பிரிதிவிராஜ் சவானுக்கு 64 வயது ஆகிறது. காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி, பிரதமர் மன்மோகன்சிங் ஆகியோரின் நம்பிக்கைக்கு பாத்திரமானவர். இவர் 1946-ம் ஆண்டு, மார்ச் 14-ந் தேதி பிறந்தவர். இவரது சொந்த ஊர் சதாரா மாவட்டம், கராட் தாலுகா கும்பர் கிராமம் ஆகும். கராட் தொகுதியிலிருந்து தற்போது எம்.பியாக உள்ளார் சவான்.
இவருடைய தந்தை மறைந்த முன்னாள் மத்திய பாதுகாப்பு இணை மந்திரி ஆனந்த்ராவ் சவான். அவர் ஜவஹர்லால் நேரு, லால் பகதூர் சாஸ்திரி, இந்திராகாந்தி ஆகியோரின் மந்திரி சபைகளில் மந்திரியாக இருந்துள்ளார். தாயார் பிரமிளா, மும்பை மாநகர காங்கிரஸ் தலைவராக பதவி வகித்தவர்.
பிரிதிவிராஜ் சவான் தொழில்ரீதியாக ஒரு என்ஜினீயர். ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள புகழ்பெற்ற பிர்லா இன்ஸ்ட்டிடிiட்டில்(பிட்ஸ் பிலானி) என்ஜினீயரிங் பட்டம் பெற்றவர். அமெரிக்காவின் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் முதுகலை பட்டம் பெற்றுள்ளார். அமெரிக்காவில் போர் விமானங்கள் மற்றும் நீர்மூழ்கி கப்பல்கள் ஆகியவற்றை பராமரிக்கும் கருவிகளுக்கான குழுக்களில் பணிபுரிந்து இருக்கிறார்.
இந்தியா திரும்பியதும் மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தியின் அறிவுறுத்தலின்பேரில் அரசியலில் நுழைந்தார். 1991-ம் ஆண்டு பாராளுமன்ற எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்திய மொழிகளில் கணினிமயத்தை அறிமுகப்படுத்திய பெருமை இவரையே சாரும்.
கடந்த ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியின்போது கையெழுத்தான இந்திய அமெரிக்க அணு சக்தி ஒப்பந்தம் தொடர்பான பணிகளில் ஈடுபட்டிருந்தவர்களில் சவானும் ஒருவர். முக்கிய சிபிஐ வழக்குகளையும் இவர் மேற்பார்வையிட்டு வந்தார்.
அஜித்பவார் வாழ்க்கை குறிப்பு
மும்பை தாக்குதலின்போது தேசியவாத காங்கிரஸ் கட்சித்தலைவர் ஆர்.ஆர்.பாட்டீல் பதவி பறிக்கப்பட்டபோதே அஜித்பவார் துணை முதல்-மந்திரியாவார் என்ற எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அப்போது சகன் புஜ்பாலுக்கு யோகம் அடித்தது. கடந்த சட்டசபை தேர்தலுக்கு பின்னரும் அஜித்பவார் மீது எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் அப்போதும் புஜ்பாலே தொடர்ந்தார். இப்போது அஜித்பவாருக்கு வாய்ப்பு கனிந்து விட்டது.
அஜித்பவார், கட்சித்தலைவர் சரத்பவாரின் மூத்த அண்ணன் ஆனந்த்ராவ் கோவிந்தராவ் பவாரின் மகன் ஆவார். சரத்பவாரின் அரசியல் வாரிசாக கருதப்பட்டு வந்தார். சுப்ரியா சுலேயின் வருகைக்கு பின்னர் அந்த வாய்ப்பு சற்றே மங்கியது. இந்த நிலையில் தான் இப்போது அஜித்பவார் துணை முதல்-மந்திரியாகி உள்ளார்.
இவர் தற்போது பாராமதி தொகுதியில் இருந்து சட்டசபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இதே தொகுதி எம்.பி.யாகவும் இவர் 1991-ம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனால் அதே ஆண்டில் அவர் மாநில அரசியலுக்கு கொண்டு வரப்பட்டு, சுதாகர் நாயக் அமைச்சரவையில் மந்திரி ஆனார்.
இவரது மனைவியின் பெயர் சுனேத்ரா. பார்த் பவார், ஜெய்பவார் என இவருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர்.