கல்விக் கட்டண தகராறு: பெரம்பூரில் பள்ளி காலவரையின்றி மூடல்!!
சென்னை: பெரம்பூர் தனியார் பள்ளியில் அதிக கட்டணம் வசூலித்ததால் மாணவர்களின் பெற்றோர் பள்ளி நிர்வாகியைத் தாக்கினர். இதனால் பள்ளி காலவரையின்றி மூடப்பட்டது.
பெரம்பூர் ஆனந்தவள்ளி தெருவில் உள்ளது கல்கி மான்போர்டு மெட்ரிக்குலேசன் பள்ளி. இந்த பள்ளியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் படிக்கிறார்கள். ஏராளமான ஆசிரியர்கள் பணியாற்றுகிறார்கள்.
இந்த பள்ளியில் கூடுதல் கல்வி கட்டணம் வசூலிப்பதாக கூறி கடந்த மாதம் கம்யூனிஸ்டு கட்சியின் மகளிர் அணியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.
இந்த நிலையில் புதன்கிழமை மாலை அந்த பள்ளியில் படிக்கும் இரண்டு மாணவர்களின் பெற்றோரான ரவிசங்கர், சேகர் ஆகியோர் பள்ளிக்கு வந்தனர். தாளாளர் தாயுமானசுவாமி புவனேஸ் என்பவரைச் சந்தித்து கல்வி கட்டணம் தொடர்பாக வாதிட்டனர்.
அப்போது, "நாங்கள் கட்டணைத்தைக் குறைக்க முடியாது. இஷ்டமில்லாவிட்டால் பிள்ளைகளுக்கு டிசி வாங்கிக் கொள்ளுங்கள். உங்களுக்கு எதற்கு தனியார் பள்ளி? போய் அரசுப் பள்ளிகளில் சேருங்கள்!" என்று கூறி பெற்றோரை அவமானப்படுத்தியுள்ளார் அந்த பள்ளி நிர்வாகி.
இதனால் ஆத்திரம் அடைந்த பெற்றோர், தாயுமான சுவாமி புவனேஸ் சட்டையை பிடித்து இழுத்து தாக்கினராம். காயம் அடைந்த அவர் உடனடியாக ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் அனு மதிக்கப்பட்டுள்ளார்.
இதுபற்றி தாயுமான சுவாமியின் தந்தையும், பள்ளி நிர்வாகியுமான ஜனார்த்தனன், செம்பியம் போலீசில் புகார் செய்தார். அதேபோல் ரவிசங்கர், சேகர் ஆகியோரும் தங்கள் தரப்பு நியாயத்தையும், பள்ளியில் கட்டணம் என்ற பெயரில் நடக்கும் கொள்ளையையும் புகாராகப் பதிவு செய்தனர். இந்தப் பள்ளியில் கட்டணக் குறைப்பு செய்யாவிட்டால், அரசே ஏற்று நடத்த வேண்டும் என்றும் கூறியுள்ளனர். இவர்களுக்கு ஆதரவாக ஏராளமான பெற்றோர் கையெழுத்திட்டுள்ளனர்.
இருதரப்பு புகார்களையும் பெற்றுக் கொண்ட போலீசார் நடந்த சம்பவம் குறித்து விசாரித்து வருகிறார்கள்.
இந்த சம்பவம் காரணமாக பள்ளி காலவரையின்றி மூடப்பட்டது.
இதற்கிடையே, பள்ளி தாளாளரைக் கண்டித்து ஆசிரியர்கள் அனைவரும் கருப்பு பேட்ஜ் அணிந்து நேற்று பள்ளிக்கு வந்தனர்.












Click it and Unblock the Notifications