''எல்லாரும் வாங்க.. திமுகவை தோற்கடிப்போம்''-பாஜக
சென்னை: வரும் சட்டசபைத் தேர்தலில் திமுகவைத் தோற்கடிக்க கொள்கைகளை எல்லாம் ஒதுக்கி வைத்துவிட்டு எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஓரணியில் திரள வேண்டும் என்று பாஜக தலைவர் இல.கணேசன் கூறியுள்ளார்.
நிருபர்களிடம் அவர் பேசுகையி்ல், திமுக அரசை ஆட்சியிலிருந்து வெளியேற்ற வேண்டும் என்ற எண்ணம் தமிழக மக்களிடம் ஏற்பட்டுள்ளது. நெருக்கடி நிலை அமலில் இருந்தபோது கொள்கைகளை எல்லாம் ஒதுக்கி வைத்துவிட்டு இந்திரா காந்திக்கு எதிராக எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஓரணியில் திரண்டன. அதேபோல இப்போது நடந்தால் தான் திமுகவை தோற்கடிக்க முடியும்.
எதிர்க்கட்சிகளிடம் ஒற்றுமை இல்லாததால்தான் போக்குவரத்து தொழிலாளர் சங்கத் தேர்தலில் திமுகவுக்கு பெரும் வெற்றி கிடைத்துள்ளது.
சாதிப் பெயரைச் சொல்லி ஸ்பெக்ட்ரம் ஊழலை திசை திருப்பும் முயற்சியில் முதல்வர் கருணாநிதி ஈடுபட்டு வருகிறார். ஆரியம்- திராவிடம் என்ற வராலற்று ஆய்வாளர்களால் நிராகரிக்கப்பட்ட சித்தாந்தத்தைக் கூறி மக்களை திசை திருப்பும் முயற்சியும் இனி தமிழகத்தில் எடுபடாது.
ஸ்பெக்ட்ரம் ஊழலில் நாடாளுமன்ற கூட்டுக் குழுவால் மட்டுமே பிரதமர் உள்ளிட்ட செல்வாக்கு மிக்கவர்களை விசாரித்து உண்மையை வெளிக் கொண்டுவர முடியும். ஆனால், உண்மை வெளிவந்து விடும் என்பதால் தான் நாடாளுமன்ற கூட்டுக் குழு விசாரணைக்கு உத்தரவிட காங்கிரஸ் தயக்கம் காட்டுகிறது.
விரக்தியில் இருந்த நாட்டு மக்களுக்கு பிகார் தேர்தல் முடிவுகள் நம்பிக்கையைத் தந்துள்ளன. இது 2014 மக்களவைத் தேர்தலில் எதிரொலிக்கும்.
பிகாரில் தனித்துப் போட்டியிட்டதன் மூலம் காங்கிரஸ் கட்சியின் செல்வாக்கு உலகத்துக்குத் தெரிய வந்தது. அதேபோல தமிழகத்திலும் அந்தக் கட்சி தனித்துப் போட்டியிட வேண்டும். அப்போதுதான் தமிழகத்தில் அதன் 'செல்வாக்கு' தெரிய வரும்.
சிறுபான்மையினருக்கு வழங்கப்படுவதுபோல இந்து மாணவர்களுக்கும் கல்வி உதவித் தொகை வழங்க வலியுறுத்தி தமிழக பாஜக தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் பிரசார யாத்திரை மேற்கொண்டுள்ளார். அதற்கு மக்களிடம் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. யாத்திரையின் நிறைவாக 2011 ஜனவரி 29ம் தேதி சென்னையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும். அதில் பாஜக தேசியத் தலைவர் நிதின் கட்கரி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்க உள்ளனர் என்றார் கணேசன்.
ராசாவை கைது செய்யக் கோரி தேமுதிக ஆர்ப்பாட்டம்:
இந் நிலையில் ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் ராசாவை கைது செய்யக் கோரி செனனையில் தேமுதிக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
காஞ்சிபுரம் வடக்கு மாட்ட தேமுதிக சார்பில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் ராசாவை கைது செய்ய வேண்டும் என்று கோஷம் எழுப்பப்பட்டது.