மழையால் பயிர் சேதம் ஏக்கருக்கு ரூ.25,000 தர ராமதாஸ் கோரிக்கை
சென்னை: தமிழகத்தில் மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.25,000 நிவாரண நிதி வழங்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தொடர்ந்து பெய்த கனமழையால் தமிழகத்தின் கடலோர மாவட்டங்கள் வெள்ளக்காடாக காட்சியளிக்கின்றன. மழை, வெள்ளச் சேதம் குறித்து பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் அரசு உத்தரவின்பேரில் ஐஏஎஸ் அதிகாரிகள் ஆய்வு செய்துள்ளனர்.
தமிழக அமைச்சரவைக் கூட்டத்தில் அவர்களின் அறிக்கையின்படி தான் வெள்ள நிவாரணம் குறித்து முடிவு செய்யப்படும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.
வெள்ளத்தால் பல பகுதிகளில் பயிர்கள் தண்ணீரில் மூழ்கியுள்ளன. அவ்வாறு பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஏக்கருக்கு ரூ. 25,000 நிவாரண நிதி வழங்க வேண்டும். வீடுகளை இழந்து தற்போது அரசு முகாம்களில் இருப்பவர்கள் வீடு திரும்புகையில் குடும்பத்துக்கு 10 லிட்டர் மண்ணெண்ணெயும், 30 கிலோ அரிசியும் இலவசமாக வழங்க வேண்டும்.
மேலும், முகாம்களி்ல் தங்கியிருப்பவர்களுக்கு இலவசமாக வேட்டி, சேலை வழங்க வேண்டும். வீடுகளை இழந்தவர்களுக்கு குறைந்தது ரூ.10,000மும், உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சமும் நிவாரணம் வழங்க வேண்டும்.
தேசிய நெடுஞ்சாலைகளைத் தவிர தமிழகத்தில் உள்ள அனைத்து சாலைகளும் சேதமடைந்துள்ளது. எனவே, இனி சாலை போடும்போது அவை குறைந்தது 3 ஆண்டுகளுக்காவது சேதமடையாமல் இருக்க வேண்டும் என்று சாலை போடும் காண்ட்ராக்டர்களுக்கு அரசு நிபந்தனை விதிக்க வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் ஒவ்வொரு ஆண்டும் அரசு மழைக் காலத்தில் சேதமடையும் சாலைகளை சீரமைக்க செலவளிக்கும் கோடிக்கணக்கான ரூபாய் மிச்சமாகும் என்று கூறியுள்ளார் ராமதாஸ்.