வீட்டு வசதிவாரிய நில ஒதுக்கீட்டில் எந்த தவறும் நடக்கவில்லை-அமைச்சர் திண்டுக்கல் பெரியசாமி

தமிழக வீட்டு வசதிவாரிய வீடுகள்,வீட்டுமனைகள் ஆகியவற்றை நீதிபதிகள், அதிகாரிகள், அரசு ஊழியர்கள் உள்ளிட்டோருக்கு விதிமுறைகளுக்குப் புறம்பாக ஒதுக்கியதாக ஆர்.டி.ஐ. தகவல் மூலம் அமபலப்படுத்தியுள்ளார் கோபாலகிருஷ்ணன் என்பவர். யார் யாருக்கு எப்படியெல்லாம் வீடுகளும், வீட்டு மனைகளும் ஒதுக்கப்பட்டன, என்னமாதிரியாக விதிகள் மீறப்பட்டுள்ளன என்ற விவரமும் வெளியாகியுள்ளது.
இதுகுறித்து நேற்று செய்தியாளர்கள் அமைச்சர் திண்டுக்கல் பெரியசாமியிடம் கேட்டபோது, எனது அலுவலகத்துக்கு உரிய ஆவணத்தோடு (ஆதாரம்) வந்து என்னை பாருங்கள். அப்பழுக்கற்ற அதிகாரி என்று தனக்குத் தானே ஒரு அதிகாரி சான்று கொடுத்து வீடு பெற்றதை பற்றி கேட்கிறீர்கள். அப்படி அவர்களே உத்தரவாதம் தரலாம். இது தொடர்பாக அலுவலகத்துக்கு வந்து டாக்குமென்டோடு பேசலாம். அதை எதிர்கொள்ள தயாராக இருக்கிறோம். ஒதுக்கீட்டில் எந்த தவறும் நடக்கவில்லை. சட்டதிட்டத்துக்கு உட்பட்டுத்தான் ஒதுக்கீடு நடந்துள்ளது என்றார்.
நிறைய வீடு வைத்திருக்கும் உயர்நீதிமன்ற நீதிபதிக்கும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளதே என்று ஒரு செய்தியாளர் கேட்டபோது, ஏற்கனவே தெளிவாக சொல்லிவிட்டேன். விதிமுறைகளுக்கு உட்பட்டுத்தான் அரசு ஒதுக்கீடு செய்யும். விதிமுறைகள் மீறப்பட்டிருந்தால் குறிப்பிட்டு புகார் கொடுங்கள். அரசு பரிசீலித்து உண்மை இருந்தால் நடவடிக்கை எடுக்கும் என்று மறுத்தார்.
தமிழக அரசின் 2 ஏக்கர் நில ஒதுக்கீடு திட்டத்தில் நிறைய முறைகேடுகள் நடந்ததாகக் கூறப்படுகிறதே என்ற இன்னொரு கேள்விக்கு அமைச்சர் பதிலளிக்கையில், எந்த முறைகேடும் நடக்கவில்லை. தமிழ்நாட்டில் நிலம் இல்லாதவர்களுக்கு நிலம் தருவதற்கே அந்த திட்டம். நீங்கள் டாக்குமென்டோட வாருங்கள்.
தொலைக்காட்சி செய்தியில் இது தொடர்பாக சொல்வது அனைத்தும் போகஸ்தான் (போலி). நான் இதனை கண்டிப்பாக எதிர்கொள்வேன். உண்மையான ஆவணங்களை கொடுங்கள். தவறு ஏதேனும் இருந்தால் கலைஞர் அரசு நடவடிக்கை எடுக்கும். எந்த ஒரு ஆவணத்திலாவது தவறு இருந்தால் அதை குறிப்பிட்டு காட்டி நிரூபியுங்கள். எனது துறை அதிகாரிகளிடம் அது பற்றி மனு கொடுத்தால் அரசு கவனிக்கும் என்று தெரிவித்தார் பெரியசாமி.












Click it and Unblock the Notifications