'மைனர்': கசாப் மனுவை தள்ளுபடி செய்தது மும்பை உயர்நீதிமன்றம்
மும்பை: மரண தண்டனையை உறுதி செய்வதை எப்படியெல்லாம் தள்ளிப்போடலாமோ அதையெல்லாம் செய்து வருகிறான் பாகிஸ்தான் தீவிரவாதி அஜ்மல் கசாப். தான் ஒரு மைனர் என்று அறிவிக்கக் கோரி அவன் தாக்கல் செய்த மனுவை மும்பை உயர் நீதிமன்றம் நேற்று தள்ளுபடி செய்தது.
அதேசமயம், தனது மனோநிலைமை குறித்தும், வயது குறித்தும் ஆராயுமாறு மருத்துவக் கழகத்திற்கு உத்தரவிடக் கோரி கசாப் தாக்கல் செய்த மனுவிற்கு இன்று பதில் அளிக்குமாறு அரசு தரப்பை நீதிமன்றம் கேட்டுக் கொண்டுள்ளது.
இந்த வழக்கை நேற்று விசாரித்த நீதிபதிகள் ரஞ்சனா தேசாய், வி. எம். மோர் அடங்கிய பெஞ்ச், கசாப் மேஜர் என்ற முடிவுக்கு வந்துள்ளது.
ஏற்கனவே இந்த விவகாரம் குறித்து இந்த வழக்கு நடக்கும் நீதிமன்றத்தில் முடிவான பிறகு, மீண்டும் கசாப் இது குறித்து விசாரணை நடத்துமாறு கேட்பதை ஏற்றுக் கொள்ள முடியாது என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.
கசாப் வயதைக் கண்டுபிடிக்க அவனுக்கு ஏற்கனவே ஆசிபிகேஷன் சோதனை செய்யப்பட்டு அவன் குற்றம் செய்கையில் மேஜர் தான மைனர் இல்லை என்று கண்டுபிடிக்கப்பட்டதாக அரசு தரப்பு வழக்கறிஞர் கூறினார்.
கசாப் தன் மரண தண்டனையை உறுதிபடுத்தவதை தள்ளிப் போடவே இவ்வாறு செய்வதாக நீதிபதிகள் கருதுகின்றனர்.
கசாபின் வழக்கறிஞர்கள் அமின் சொல்கர் மற்றும் பர்ஹானா ஷா ஆகியோர் இந்தியா மற்றும் பாகிஸ்தானில் இருக்கும் ஒரு என்ஜிஓ-வை நியமித்து, அவர்களை கசாப் பற்றியும், அவனின் குடும்பப் பின்னணி, அவன் எந்த சூழ்நிலையில் 26/11 தாக்குதலில் ஈடுபட்டான் என்பது குறித்து ஆய்வு மேற்கொள்ளும்படி நீதிமன்றத்தைக் கேட்டுக் கொண்டனர். இது குறித்து இன்று முடிவு செய்யப்படும்.