நில ஊழலில் நான் ஈடுபட்டதாக அவதூறு பரப்பினால் சட்ட நடவடிக்கை-ராஜாத்தி அம்மாள் எச்சரிக்கை
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எச்சரிக்கைச் செய்தியில்,
ஏற்கனவே ராயல் நிறுவனத்தில் பணியாளராக இருந்து, தற்போது பிரிந்து சென்று தனியாக நிலம் வாங்கி விற்கும் தொழிலை செய்து கொண்டிருக்கும் சரணவன் என்பவர், சென்னை அண்ணாசாலையில் வோல்டாஸ் நிறுவனம் குத்தகைக்கு இருந்த இடத்தை அந்த இடத்தின் உரிமையாளரிடம் பவர் ஆஃப் அட்டர்னி முறையில் வாங்கி, அந்த நிலத்தை மலேசிய நாட்டுத் தொழிலதிபர் டாக்டர் சண்முகநாதன் என்பவருக்கு விற்றுள்ளதாக தெரிகிறது.
டாக்டர் சண்முகநாதன் என்பவருக்கும், ராயல் நிறுவனத்திற்கும் எந்தவிதமான கொடுக்கல் வாங்கலோ, தொடர்போ கிடையாது. ஆனால் அந்த இடத்தை நான் வாங்கியதைப் போல சில மீடியாக்கள் வேண்டுமென்றே தவறான செய்தியை உள்நோக்கத்தோடு வெளியிட்டு வருகிறது.
தொடர்ந்து இத்தகைய செயல்களில் ஈடுபடுவார்களேயானால், அவர்கள் மீது வழக்கறிஞர்கள் மூலமாக சட்டப்பூர்வமான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று அவர் கூறியுள்ளார்.
அதேபோல முதல்வரின் மகளும், திமுக எம்.பியுமான கனிமொழியும் இந்தப் புகாரை மறுத்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், சம்பந்தப்பட்ட நிலம் டாடாவுக்குச் சொந்தமானது அல்ல. அது மலேசியாவைச் சேர்ந்த ஒரு தொழிலதிபருக்குச் சொந்தமானது. எந்த வகையிலும் அந்த நிலத்துடன் எங்களுக்கும், திமுகவுக்கும் தொடர்பு இல்லை என்றார்.
இதுகுறித்து சிஎன்என் ஐபிஎன் டி.வி வெளியிட்ட செய்தியில், 53,000 சதுர அடி கொண்ட அந்த நிலத்தை வோல்டாஸ் நிறுவனம் டாடா நிறுவனத்திற்கு லீஸுக்கு விட்டுள்ளதாக கூறியிருந்தது.