சங்கரன்கோவில் அருகே அதிமுக டிஜிட்டல் போர்டு கிழிப்பு-பதற்றம், போலீஸ் குவிப்பு
சங்கரன்கோவில்: சங்கரன்கோவில் அருகே அதிமுக டிஜி்ட்டல் போர்டு கிழிக்கப்பட்டதால் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இதனால் அங்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
சங்கரன்கோவில் சட்டமன்ற தொகுதி மேலநீலிதநல்லூர் ஒன்றியம் ஜெ பேரவை சார்பில் பனவடலிசத்திரம் பிள்ளையார் கோவில் திடலில் ஸ்பெக்டரம் முறைகேட்டை கண்டித்து நேற்று மாலை பொதுக் கூட்டம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதற்காக துண்டு பிரசுரங்கள் அடிக்கப்பட்டு ஒன்றிய பகுதி முழுவதும் விநியோகிக்கப்பட்டது. மேலும், கூட்டம் தொடர்பாக பனவடலிசத்திரம் பேருந்து நிலைய மெயின் ரோட்டில் ஒன்றிய பேரவை மற்றும் அண்ணா ஆட்டோ தொழிற்சங்கம் சார்பில் இரண்டு டிஜிட்டல் போர்டு வைக்கப்பட்டிருந்தது.
இந்த போர்டில் மாநில பேரவை செயலாளர் நயினார் நாகேந்திரன், தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், அமைப்பு செயலாளருமான கருப்பசாமி, மாவட்ட பேரவை செயலாளர் பிஜி ராஜேந்திரன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சுப்பையா பாண்டியன் ஆகியோரது பெயர் மற்றும் படங்கள் இடம் பெற்றிருந்தன.
ஆனால் மாவட்ட செயலாளர் ராஜா செந்தூர்பாண்டியன் படம் இடம்பெறவில்லை. இதுபோல் துண்டு பிரசுரத்தில் மாவட்ட பேரவை துணை தலைவர் தனபால் தலைமை வகிப்பதாகவும், ஒன்றிய செயலாளர் முருகையா, தொகுதி இணை செயலாளர் சுப்பிரமணியன் உள்பட பலர் வரவேற்பதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது.
மேலும் சிறப்புரையாற்றுபவர் பெயரில் மாவட்ட செயலாளர் ராஜா செந்தூர்பாண்டியன் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் பெயர் இடம் பெற்றிருந்தது. இந்நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு அங்கு வைக்கப்பட்டிருந்த இரு டிஜிட்டல் போர்டுகளும் கிழிந்து கிடந்தன. நேற்று காலை அதை பார்த்த கட்சியினர் அதிர்ச்சி அடைந்தனர்.
ஏற்கனவே நெல்லை மாவட்டத்தில் மாவட்ட செயலாளர் ராஜா செந்தூர்பாண்டியன் தலைமையில் ஒரு கோஷ்டியும், நயினார் நாகேந்திரன் தலைமையில் ஒரு கோஷ்டியும் செயல்பட்டு வரும் நிலையில் பனவடலிசத்திரத்தில் ராஜா செந்தூர்பாண்டியன் படம் இடம் பெறாத டிஜி்ட்டல் போர்டு சேதப்படுத்தப்பட்டிருப்பது பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இதை தொடர்ந்து அங்கு போலீசார் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டுள்ளனர்.