சமையல் கேஸ் சிலிண்டரின் விலை ரூ. 50 உயர்கிறது!
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலைக்கு ஏற்ப பெட்ரோல் விலையை உயர்த்திக் கொள்ள இந்திய எண்ணெய் நிறுவனங்களுக்கு மத்திய அரசு அனுமதி அளித்துவிட்டது. இதையடுத்து அதன் விலையை எண்ணெய் நிறுவனங்கள் அவ்வப்போது உயர்த்தி வருகின்றன.
அதே நேரத்தில் டீசல் மற்றும் கேஸ் விலையை சர்வதேச விலைக்கு ஏற்ப உயர்த்திக் கொள்ள அனுமதி தரப்படவில்லை. இந் நிலையில் சர்வதேச சந்தையில் எரிவாயுவின் விலையும் உயர்ந்துவிட்டதால், இந்தியாவிலும் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையை உயர்த்த அனுமதிக்க வேண்டும் என்று மத்திய அரசை எண்ணெய் நிறுவனங்கள் வலியுறுத்த ஆரம்பித்துள்ளன.
விலையை சிலிண்டர் ஒன்றுக்கு ரூ. 100 வரை உயர்த்த அனுமதிக்க வேண்டும் என்று இந்த நிறுவனங்கள் கோரிக்கை விடுத்துள்ளன. ஆனால், தமிழகம், மேற்கு வங்கம், கேரளாவில் அடுத்த 5 மாதங்களில் தேர்தல் நடக்கவுள்ளதால் விலையை ரூ. 50 மட்டும் உயர்த்த மத்திய அரசு அனுமதி்க்கும் என்று தெரிகிறது.
இந்த விலை உயர்வு விரைவிலேயே அமலுக்கு வரும் என்றும் கூறப்படுகிறது.