குழந்தைகளுக்கு தமிழில் பெயர்!-முக ஸ்டாலின் வேண்டுகோள்
சென்னை: குழந்தைகளுக்கு தமிழ் பெயர் சூட்ட வேண்டும் என்று துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் கேட்டுக்கொண்டார்.
தமிழக துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் திருநெல்வேலியில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். சனிக்கிழமை காலை திருநெல்வேலி ஆர்.கே.வி. திருமண மண்டபத்தில் நெல்லை மாவட்ட திமுக பிரமுகர் நாலடியார் இல்ல திருமண விழாவில் பங்கேற்று, மணமக்கள் குறள் அமுதன் - கஸ்தூரி ஆகியோரின் திருமணத்தை நடத்தி வைத்தார்.
அப்போது பேசிய மு.க.ஸ்டாலின், "இது சீர்த்திருத்த, சுயமரியாதை திருமணமாகும். இத்தகைய திருமணத்திற்கு அண்ணா தலைமையில் அமைந்த திமுக ஆட்சிதான் சட்ட அங்கீகாரத்தை பெற்றுத் தந்தது. இப்போது எல்லாம் வைதீக திருமணங்களை விட சுயமரியாதை திருமணங்கள்தான அதிகம் நடைபெறுகிறது.
புரோகிதர்களைவிட இப்படிப்பட்ட சுயமரியாதை திருமணங்களை நடத்தி வைக்கும் எங்களை போன்றவர்களுக்கு அதிக கிராக்கி ஏற்பட்டுள்ளது. தமிழ் மொழிக்கு பெருமை சேர்ப்பதற்காக முதல்வர் கருணாநிதி பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். செம்மொழி அங்கீகாரத்தை தமிழ் மொழிக்கு பெற்றுத் தந்ததுடன், உலகே வியக்கத்தக்க மாநாடு ஒன்றையும் நடத்தி காட்டினார்.
இதுபோன்ற திருமண விழாக்களில் பங்கேற்கும் நான், மணமக்களுக்கு ஒரு வேண்டுகோளை விடுப்பேன். உங்களுக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு தமிழ் பெயரை சூட்டுங்கள் என்பதுதான் அந்த வேண்டுகோள். அதையே இந்த மணமக்களுக்கு வேண்டுகோளாக வைத்து அவர்கள் எல்லா நலமும் வளமும் பெற்று பல்லாண்டு வாழ வாழ்த்துகிறேன்," என்றார்.