கருணாநிதி கோரிக்கை-9 அதிமுக எம்எல்ஏக்கள் சஸ்பெண்ட் ரத்து!
சென்னை: ஆளுநர் உரையின்போது அவரை பேச விடாமல் தடுத்து சட்டசபையில் பெரும் அமளியி்ல் ஈடுபட்டதால் சஸ்பெண்ட் செய்யப்பட்ட 9 அதிமுக எம்எல்ஏக்களின் இடைநீக்கம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து அவர்கள் நாளை முதல் அவை நடவடிக்கைகளில் பங்கேற்கலாம்.
தமிழக சட்டசபைக் கூட்டத் தொடர் கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கியது. ஆண்டின் முதல் கூட்டம் என்பதால் ஆளுநர் சுர்ஜித் சி்ங் பர்னாலாவின் உரையுடன் கூட்டம் தொடங்கியது.
அதிமுக, மதிமுக, கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்கள் விலைவாசி உயர்வு, மின்வெட்டு உள்ளிட்ட பிரச்சனைகளைக் கண்டித்து கருப்புச் சட்டையுடன் வந்திருந்தனர். காய்கறி மாலைகள் அணிந்தும், கருப்பு சால்வை அணிந்தும் அவர்கள் வந்திருந்தனர்.
ஆளுநர் உரையாற்றத் தொடங்கியபோது அதிமுக, கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகளின் உறுப்பினர்கள் எழுந்து பேசத் தொடங்கினர். இதையடுத்து ஆளுநர் உரையாற்றுவதில் பிரச்சனை ஏற்பட்டது.
இதையடுத்து அனைவரையும் வெளியேற்றுமாறு அவைக் காவலர்களுக்கு சபாநாயகர் ஆவுடையப்பன் உத்தரவிட்டார். இதையடுத்து அனைவரும் வெளியேற்றப்பட்டனர். மதிமுக, இடதுசாரி எம்எல்ஏக்கள் நாகரீகமாக வெளியேறினர்.
ஆனால், அதிமுக உறுப்பினர்கள் அவைக் காவலர்களுடன் மோதலில் ஈடுபட்டதோடு பெரும் கூச்சல், குழப்பத்தையும் உருவாக்கினர். இவர்களால் அவையில் பெரும் அமளி ஏற்பட்டது.
இதையடுத்து இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடப்பட்டது.
இந் நிலையில் இன்று பொள்ளாச்சி ஜெயராமன், கேபாண்டுரங்கன், டி.ஜெயகுமார், திருத்தணி கோ ஹரி, வேலுமணி, ரவிச்சந்திரன், அக்ரி கிருஷ்ணமூர்த்தி, செந்தில் பாலாஜி, சி.வி.சண்முகம் ஆகிய 9 அதிமுக எம்எல்ஏக்களையும் சஸ்பெண்ட் செய்யும் தீர்மானத்தை அவை முன்னவரும் நிதியமைச்சருமான அன்பழகன் கொண்டு வந்தார்.
இதை ஏற்றுக் கொண்ட பேரவைத் தலைவர் ஆவுடையப்பன் அவர்கள் 9 பேரையும் கூட்டத் தொடர் முழுவதும் சஸ்பெண்ட் செய்ததுடன், அவர்களை அவையிலிருந்து வெளியேற்ற உத்தரவிட்டார். இதையடுத்து 9 பேரும் அவைக் காவலர்களால் அவையிலிருநத்து வெளியேற்றப்பட்டனர்.
இந் நிலையில் அவர்களது சஸ்பெண்டை ரத்து செய்ய வேண்டும் என்று இன்று அதிமு, மதிமுக, இடதுசாரிகள் கோரிக்கை விடுத்தனர்.
ஆனால், சட்டசபையில் ஜனநாயகத்துக்கு எதிராக செயல்பட்ட எம்.எல்.ஏக்கள் மீதான சஸ்பெண்ட் உத்தரவை ரத்து செய்ய முடியாது என்று அமைச்சர் அன்பழகன் கூறினார்.
இதையடுத்து அதிமுக, எம்எல்ஏக்கள் சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். அவர்களுக்கு ஆதரவாக மதிமுக, மார்க்சிஸ்ட் எம்.எல்.ஏக்களும் வெளிநடப்பு செய்தனர்.
அப்போது பேசிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சி எம்எல்ஏ சிவபுண்ணியம், ஏற்கனவே இதுபோன்று சஸ்பெண்ட் செய்யப்பட்டவர்கள் மறுபரிசீலனைக்கு பிறகு சபைக்கு வர அனுமதிக்கப்பட்டு இருக்கிறார்கள். அதே போன்று இந்த முறையும் 9 எம்.எல்.ஏக்களையும் மன்னித்து அவர்களை மீண்டும் சபைக்கு வந்து ஜனநாயக கடமையாற்ற அனுமதிக்க வேண்டும் என்றார்.
முதல்வர் கருணாநிதி: உறுப்பினர் சிவபுண்ணியம் சஸ்பெண்ட் செய்யப்பட்ட 9 உறுப்பினர்களையும் மீண்டும் சபைக்கு வர அனுமதிக்க வேண்டும் என்றார். ஆளுனருக்கு எதிராக கருத்து கூறியதற்காக அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை. அவை காவலர்களை தாக்கியதற்காகவும், வன்முறையில் ஈடுபட்டதற்காகவும் கவர்னருக்கு எதிராக அட்டூழியம் செய்ததற்காகவும் அவர்கள் மீது அந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.
அவர்கள் வெளியே செல்வதிலேயே குறியாக இருக்கிறார்கள். அவர்கள் உள்ளே வர தயாராக இருந்தால் மறப்போம், மன்னிப்போம் என்ற அண்ணாவின் கருத்துபடி எதையும் மறப்பதற்கும், மன்னிப்பதற்கும் தயாராக இருக்கிறோம்.
(இதையடுத்து வெளியே சென்ற அதிமுக மற்றும் கூட்டணி கட்சியினர் சபைக்குள் வந்தனர்.)
சிவபுண்ணியம்: 9 அதிமுக எம்.எல்.ஏக்களையும் ஜனநாயக கடமையாற்ற அனுமதிக்க வேண்டும்.
முதல்வர் கருணாநிதி: சிவபுண்ணியம் திரும்பத் திரும்ப ஒரே கோரிக்கையை வைத்துக் கொண்டு இருக்கிறார். நான் ஒரு விளக்கம் அளிக்க விரும்புகிறேன். கடந்த காலத்தில் இது போன்ற சம்பவங்கள் நடந்தபோது தண்டனை குறைக்கப்பட்டதும் உறுப்பினர்கள் திரும்ப அழைக்கப்பட்டதும் உண்டு என்று சொல்கிறார். அது சரியல்ல. தவறு. இமாலய தவறு.
கடந்த ஆட்சியின் போது பேராசிரியர் உள்ளிட்ட தி.மு.க. எம்.எல்.ஏக்கள் வெளியேற்றப்பட்டதோடு அல்லாமல் அவர்களது பதவியும் பறிக்கப்பட்டது. அப்போதெல்லாம் சி.பி.ஐ., சி.பி.எம். கட்சிகள் அதை வலியுறுத்தி போராட்டம் நடத்தவில்லை. மறுபரிசீலனை செய்யவும் கோரவில்லை என்பதை நினைவூட்ட விரும்புகிறேன்.
என்றாலும் இப்போது நடந்த சம்பவத்தில் நடந்தது நடந்ததாக இருக்கட்டும். நடப்பவை நல்லதாக இருக்கட்டும் என்ற கருத்தின் அடிப்படையில், மறப்போம், மன்னிப்போம் என்ற அண்ணாவின் கொள்கைப்படி அண்ணாவின் வழி வந்த அரசு என்பதால் வெளியே சென்றவர்கள் மீண்டும் அவைக்கு வந்து முழு ஒத்துழைப்பு கொடுக்கும்படி கேட்டுக் கொள்கிறேன்.
சபாநாயகர் ஆவுடையப்பன்: முதல்வரின் கோரிக்கையை ஏற்று துணை முதல்வர் தீர்மானம் ஒன்றை கொண்டு வருவார்.
துணை முதல்வர் மு.க.ஸ்டாலின்: 7-1-2011ல் இந்த அவையில் ஆளுனர் உரையாற்றியபோது அவைக்கு குந்தகம் ஏற்படும் வகையில் நடந்து கொண்ட அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள் பொள்ளாச்சி ஜெயராமன், அரி, பாண்டுரங்கன், வேலுமணி, ஜெயக்குமார், ரவிச்சந்திரன், அக்ரி கிருஷ்ணமூர்த்தி, செந்தில்பாலாஜி, சி.வி.சண்முகம் ஆகிய 9 பேரும் 10ம் தேதி பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில் அவை கூட்டத்தில் கலந்து கொள்ளாமலும், சட்டமன்ற உரிமை செயல்பாடுகளில் இருந்தும் நீக்கி வைக்கப்பட்டு இருந்தனர்.
முதல்வரின் பரிந்துரையை ஏற்று நாளை முதல் அவர்கள் கூட்டத்தில் கலந்து கொள்ளலாம் என்ற தீர்மானத்தை முன்மொழிகிறேன்.
இந்தத் தீர்மானம் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது.
சபாநாயகர் ஆவுடையப்பன்: 9 அ.தி.மு.க. எம்.எல்.ஏக்களுக்கும் 10ம் தேதி இந்த சபையில் நிறைவேற்றப்பட்ட தண்டனை குறைக்கப்படுகிறது. 12-1-2011 முதல் அவர்கள் சபைக்கு வரலாம் என்று ஆணையிடுகிறேன்.