காமன்வெல்த் போட்டிக் குழுத் தலைவர் பதவியிலிருந்து சுரேஷ் கல்மாடி நீக்கம்
டெல்லி: காமன்வெல்த் போட்டிக் குழுத் தலைவர் பதவியிலிருந்து சுரேஷ் கல்மாடியை நீக்கியுள்ளனர். முதலிலேயே இதைச் செய்யாமல் இத்தனை காலம் கழித்து நடவடிக்கை எடுத்துள்ளது மத்திய அரசு.
டெல்லி காமன்வெல்த் போட்டி தொடர்பான ஊழல்கள் புற்றீசல் போல கிளம்பி வந்தபோது, கல்மாடியை நீக்க கோரிக்கை விடுக்கப்பட்டது. ஆனால் அதை அப்போது மத்திய அரசு ஏற்கவில்லை. போட்டி முடிந்த பிறகு பார்க்கலாம் என்று கூறியது. போட்டி முடிந்த பிறகும் கூட கல்மாடி நீக்கப்படவில்லை. மாறாக சிபிஐ ரெய்டு, விசாரணை என்று நடந்து வந்தது. இந்த நிலையில் இன்று கல்மாடி நீக்கப்பட்டுள்ளார்.
விசாரணை பாரபட்சமின்றியும், நியாயமாகவும், நேர்மையாகவும் நடப்பதை உறுதி செய்யும் வகையில் கல்மாடி நீக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இதுதொடர்பாக அட்டர்னி ஜெனரலின் அறிவுரையும் பெறப்பட்டுள்ளதாம்.
கல்மாடியின் நெருங்கிய கூட்டாளியான, போட்டி பொதுச் செயலாளர் லலித் பானட்டும் நீக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவுகளை புதிய விளையாட்டுத்துறை அமைச்சர் அஜய் மேக்கான் பிறப்பித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், விசாரணை பாரபட்சமின்றி நடைபெற வேண்டும். மேலும், கல்மாடி பதவியில் தொடருவது குறித்து சிபிஐ கவலை தெரிவித்திருந்தது. இதையடுத்து கல்மாடியை நீக்கும் முடிவு எடுக்கப்பட்டது. இந்த முடிவு உடனடியாக அமலுக்கு வருகிறது.
தனது பொறுப்புகளை காமன்வெல்த் போட்டிக் குழுவின் தலைமை செயல் அதிகாரி ஜர்னைல் சிங்கிடம் ஒப்படைக்க கல்மாடி அறிவுறுத்தப்பட்டுள்ளார்.
அடுத்த உத்தரவு வரும் வரை தலைவர் பொறுப்புகளை ஜர்னைல் சிங் வகிப்பார் என்றார்.
கல்மாடியும், பானட்டும் இத்தனை நாட்களாக பதவிகளை ராஜினாமா செய்ய முடியாது என்று பிடிவாதமாக இருந்து வந்ததும் நினைவிருக்கலாம்.












Click it and Unblock the Notifications