தமிழக மீனவர்கள் கொல்லப்படுவதை ஒருமுறை கூட இந்திய அரசு தடுக்கவில்லையே? திருமா
சென்னை: கடந்த 1983-ம் ஆண்டிலிருந்து தொடரும் இந்த தமிழக மீனவர்கள் மீதான தாக்குதல் கொடுமைகளை கண்டிக்கவோ தடுக்கவோ இந்திய அரசு ஒரே ஒரு முறை கூட முன்வரவில்லையென்பது வேதனையளிக்கிறது என்று விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கை:
கடந்த 12-ந்தேதி நாகை மாவட்டம் சின்னங் குடியைச் சேர்ந்த மீனவர் பாண்டியன் இதே சிங்கள இனவெறியர்களால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டார். அந்த வேதனையின் வலி மறைவதற்குள் மீண்டும் ஜெயக்குமார் என்பவரை படுகொலை செய்துள்ளது இடிமேல் இடி விழுந்த பெருங்கொடுமையாய் நெஞ்சைச் சுட்டெரிக்கிறது.
அடுக்கடுக்கான படு கொலைகள் நடந்தும் கூட இந்திய அரசு இத்தகைய போக்குகளை ஒரு பொருட்டாகவே மதிக்க வில்லை என்பது சிங்களவர்களுக்கு ஊக்கமளிப்பதாகவே அமைகிறது. சர்வ தேசக் கடல் எல்லையைத் தாண்டி வந்து தமிழக மீனவர்களின் உடமைகளைச் சூறையாடுவதும் எண்ணற்ற உயிர்களைப் பறிப்பதும் சிங்களவர்களின் வாடிக்கையாகவே அமைந்துள்ளது.
கடந்த 1983-ம் ஆண்டிலிருந்து தொடரும் இந்த கொடுமைகளை கண்டிக்கவோ தடுக்கவோ இந்திய அரசு ஒரே ஒரு முறை கூட முன்வரவில்லையென்பது மேலும் வேதனையளிக்கிறது.
தமிழீழ மக்களை மட்டுமின்றி தமிழ்நாட்டு மக்களையும் தொடர்ந்து வஞ்சித்து வருகிற இந்திய அரசின் போக்கையும் இலங்கை அரசையும் விடுதலைச் சிறுத்தைகள் மிக வன்மையாக கண்டிக்கிறது. படுகொலையான ஜெயக்குமாரின் குடும்பத்திற்கு விடுதலைச் சிறுத்தைகளின் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
இழப்பீட்டு தொகையாக அவரது குடும்பத்திற்கு ரூ. 5 லட்சம் வழங்கியுள்ள தமிழக அரசு, அதனை ரூ. 10 லட்சமாக உயர்த்தி வழங்க வேண்டுமெனக் கேட்டுக் கொள்வதுடன் அவரது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலைவாய்ப்பு வழங்க வேண்டுமெனவும் விடுதலை சிறுத்தைகளின் சார்பில் வற்புறுத்தி கேட்டுக் கொள்கிறோம் என்று அவர் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications