சட்டமன்றத் தேர்தல்-ஒரே நேரத்தில் 68 உயர் போலீஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்
சென்னை: தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நடக்க இருப்பதையொட்டி ஒரே நேரத்தில் 68 உயர் போலீஸ் அதிகாரிகள் இடம் மாற்றப்பட்டுள்ளனர். இத்ல 34 அதிகாரிகளுக்கு பதவி உயர்வோடு இடமாறுதல் அளிக்கப்பட்டுள்ளது.
தேர்தல் நடைபெற உள்ளதையடுத்து, ஒரே இடத்தில் 3 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றும் மற்றும் சொந்த ஊரில் பணியாற்றும் ஐ.பி.எஸ், ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை உடனடியாக இடமாற்றம் செய்ய வேண்டும் என்பது தேர்தல் கமிஷனின் விதி.
இதையடுத்து ஒரே நாளில் 68 ஐ.பி.எஸ். அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக தமிழக அரசின் உள்துறைச் செயாலளர் கே.ஞானதேசிகன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
ஏ.டி.ஜி.பிக்கள் ஷ்யாம் சுந்தர், விபாகர் சர்மா ஆகியோர் டி.ஜி.பிக்களாகப் பதவி உயர்வு பெற்றுள்ளனர். டி.ஐ.ஜி. அந்தஸ்தில் உள்ள 8 பேர் ஐ.ஜிக்களாகவும், எஸ்.பி பதவியில் இருந்து 14 பேர் டி.ஐ.ஜிக்களாகவும்,
கூடுதல் எஸ்.பி, இணை எஸ்.பி. அந்தஸ்தில் உள்ள 10 பேருக்கு எஸ்.பியாகவும் பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.
மதுரை மாநகர புதிய போலீஸ் கமிஷனராக ஏ.பாரியும், திருச்சி மாநகர போலீஸ் கமிஷனராக மாசானமுத்துவும், திருநெல்வேலி மாநகர போலீஸ் கமிஷனராக வி. வரதராஜுவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
மாநில மனித உரிமைகள் ஆணைய கூடுதல் டி.ஜி.பியாக பணியாற்றும் ஷியாம் சுந்தர், டி.ஜி.பியாக பதவி உயர்வு பெற்று, அமலாக்கப்பிரிவு டி.ஜி.பியாக நியமிக்கப்பட்டுள்ளார். இதேபோல, கூடுதல் டி.ஜி.பி. அந்தஸ்தில் இருக்கும் தமிழ்நாடு போலீஸ் வீட்டுவசதி கழக மேலாண்மை இயக்குனர் விபாகர் சர்மா பதவி உயர்வுபெற்று தொடர்ந்து அதே பதவியில் நீடிப்பார்.
சென்னை ரயில்வே துறையில் எஸ்.பியாக பணியாற்றிய ஏ.ஜி. மௌரியா, திருச்சி சரக டி.ஐ.ஜியாக பதவி உயர்வு பெற்றுள்ளார்.
திருச்சி சரக டி.ஐ.ஜியாக பணியாற்றிய பொன்மாணிக்கவேல், விழுப்புரம் சரக டி.ஐ.ஜியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். சென்னை ஏ.ஐ.ஜியாக இருந்த செந்தாமரைக்கண்ணன், சென்னை ஆயுதப்படை காவல்துறை டி.ஐ.ஜியாக பதவி உயர்வு பெற்றுள்ளார்.
சென்னை ஆயுதப்படை பிரிவின் டி.ஐ.ஜியாக இருந்த வி.ஏ. ரவிக்குமார், தஞ்சாவூர் சரக டி.ஐ.ஜியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். தஞ்சாவூர் சரக டி.ஐ.ஜியாக பணியாற்றிய திருஞானம், சென்னை போலீஸ் பயிற்சி டி.ஐ.ஜியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
சென்னை காவல்துறை மத்திய குற்றப்பிரிவு துணை கமிஷனராக பணியாற்றிய சி. ஸ்ரீதர், சென்னை சி.பி.சி.ஐ.டி டிஐஜியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
இதே போல பல அதிகாரிகள் மாற்றப்பட்டுள்ளனர்.