பிரமோஸ் ஏவுகணை தொழிற்கூடத்தை பார்வையிட்ட பிரதமர்
திருவனந்தபுரம்: திருவனந்தபுரத்தில் பிரமோஸ் ஏவுகணை தொழிற்கூடத்தை பிரதமர் மன்மோகன்சிங் பார்வையிட்டார்.
பிரதமர் மன்மோகன் சி்ங் கேரளாவில் 3 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். கொச்சியை அடுத்த வல்லார்மடத்தில் கப்பல்களில் பெட்டகங்களை கையாளும் முனைமத்தை நேற்று முன்தினம் திறந்து வைத்தார். நேற்று அவர் திருவனந்தபுரம் வந்தார். அப்போது அவர் ரஷ்யாவின் தொழில்நுட்ப உதவியுடன் செயல்படும் பிரமோஸ் ஏவுகணை தொழில்கூடத்துக்கு சென்றார்.
அங்கு அவரை தொழில்கூட நிர்வாக டைரக்டர் ஏ. சிவதாணு பிள்ளை வரவேற்று தொழிற்கூடம் முழுவதையும் சுற்றி காட்டினார். அப்போது மன்மோகன்சிங் பிரமோஸ் ஏவுகணையின் ஒவ்வொரு பகுதியும் எவ்வாறு உருவாக்கப்படுகிறது என கேட்டறிந்தார். முன்னதாக அவர் திருவனந்தபுரம் விமான நிலையத்தில் ரூ.289 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள சர்வதேச விமான முனைமத்தை திறந்து வைத்தார்.
பின்னர் அவர் பேசியதாவது,
இந்தியாவில் விமான போக்குவரத்து அதிகரித்து வருகிறது. வரும் ஆண்டுகளில் இந்த துறைக்கு 6 லட்சம் கோடி ரூபாயை மத்திய அரசு ஒதுக்க திட்டமிட்டுள்ளது. இதனால் லட்சக்கணக்கானவர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும். இந்தியாவில் உள்ள அனைத்து விமான நிலையங்களையும் சர்வதேச தரத்துக்கு உயர்த்துவதை குறிக்கோளாக கொண்டுள்ளோம் என்றார்.












Click it and Unblock the Notifications