2ஜி ஸ்பெக்ட்ரம்: ரிலையன்ஸ்-டாடா பகிரங்க மோதல்!
டெல்லி: 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் எங்களால் அரசுக்கு எந்த இழப்பும் ஏற்படவில்லை என்று டாடா டெலி சர்வீசஸ் நிறுவனம் கூறியுள்ளது.
அனில் அம்பானியின் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம் ஸ்வான் நிறுவனத்தில் பங்குகள் வைத்திருந்ததாகவும், ஸ்வான் நிறுவனத்துக்கு ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு செய்யப்பட்டபோது அதில் ரிலையன்சும் பெரும் பயன் அடைந்த விவரமும் இப்போது வெளியாகியுள்ளது.
இது குறித்து ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம் வெளியிட்ட மறுப்பு அறிக்கையில், 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் இரட்டை தொழில் நுட்பத்துக்கான (GSM, CDMA) உரிமம் பெறுவதில் எங்கள் நிறுவனம் விதிமுறைகளை மீறி செயல்படவில்லை. ஆனால், பழைய ஜி.எஸ்.எம். ஆபரேட்டர்களால்தான் அரசுக்கு ஒரு லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது என்று டாடா நிறுவனத்தை மறைமுகமாக குற்றம் சாட்டியிருந்தது.
இதற்கு பதில் அளித்துள்ள டாடா டெலி சர்வீசஸ் நிறுவனம், ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு எல்லா தொலைத் தொடர்பு வட்டங்களிலும் இரட்டை தொழில்நுட்பத்துக்கான லைசென்ஸ் உடனடியாக கிடைத்துவிட்டது.
ஆனால் எங்களுக்கு விண்ணப்பித்து 83 நாள்கள் தாமதத்துக்கு பிறகு தான் லைசென்ஸ் கிடைத்தது. டெல்லி உள்ளிட்ட சில பகுதிகளில் எங்களுக்கு இன்னமும் இரட்டை தொழில்நுட்பத்துக்கான ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஒதுக்கீடு செய்யப்படவில்லை. நாங்கள் விதிமுறைகளை முறையாக பின்பற்றி இருக்கிறோம். இதனால் ரிலையன்ஸின் குற்றச்சாட்டு எங்களுக்குப் பொருந்தாது என்று கூறியுள்ளது.