புதிய வரிகள் இல்லாத சென்னை மாநகராட்சி பட்ஜெட்
சென்னை: 2011-12ம் ஆண்டுக்கான சென்னை மாநகராட்சியின் பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டது. இதில் புதிய வரிகள் ஏதும் விதிக்கப்படவில்லை.
தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நடக்கவுள்ள நிலையில் திமுக மேயர் மா.சுப்பிரமணியம் இன்று பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அதன் முக்கிய அம்சங்கள்:
சென்னையில் பொதுமக்கள் பாதுகாப்பாக சாலைகளை கடப்பதற்கு உதவும் வகையில் லிஃப்ட் வசதியுடன் கூடிய 5 புதிய பாதசாரி மேம்பாலங்கள் கட்டப்படும்.
மாநகராட்சிப் பள்ளி மாணவ, மாணவியருக்கு தற்போது உள்ள சீருடையுடன், புதன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் அணிவதற்கு தலா ஒரு செட் புதிய வெள்ளை சீருடை வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. உயர் நிலை மற்றும் மேல்நிலை மாணவிகளுக்கான சீருடையில் தற்போதுள்ள துப்பட்டாவுக்கு பதிலாக ஓவர் கோட் வழங்கப்படும்.
வட சென்னையில் இரண்டு சென்னை மேல்நிலை பள்ளிகளும், தென் சென்னையில் இரண்டு சென்னை மேல்நிலைப்பள்ளிகளும் தேர்வு செய்யப்பட்டு ஓடுதளம் மற்றும் ஆடுகளம் அமைக்கப்படும்.
புதிய பாடப்பிரிவுகள் கொண்ட சமுதாயக் கல்லூரிகள் தொடங்கப்படும். சென்னை பள்ளிகளில் பிரெஞ்ச் மொழி பாடங்கள் அறிமுகப்படுத்தப்படும்.
வெளிநாடுகளுக்கு செல்வோருக்கு சுகாதார ஆலோசனைகள் வழங்கவும் தடுப்பூசி சிகிச்சை அளிக்கவும் சுகாதார மையம் அமைக்கப்படும்.
நடைபாதை வாசிகள் தங்குவதற்கு சென்னையில் 9 இடங்களில் இரவு காப்பகங்கள் அமைக்கப்படும். வடசென்னையில் ஆதரவற்றோருக்கும், முதியோருக்கும் காப்பகம் அமைக்கப்படும்.
அமரர் ஊர்திகள் மற்றும் அமரர் குளிர்சாதன பெட்டிகள் தனியாரிடம் இருந்து வாங்கி பொதுமக்களுக்கு இலவசமாக வழங்கப்படும்.
வளர்ப்புப் பிராணிகளை எரிப்பதற்கு மைலாப்பூரிலும், மூலக்கொத்தளத்திலும் இரண்டு தகன மேடைகள் அமைக்கப்படும்.
மாநகராட்சி மருத்துவமனைகளில் பொது மக்கள் ரூ.500 கட்டணத்தில் முழு உடல் பரிசோதனை செய்து கொள்ளும் திட்டம் கொண்டு வரப்படும்.
மெரீனா, எலியட்ஸ், திருவான்மியூர் கடற்கரைகள் உள்ளிட்ட இடங்களில் 1,000 துருப்பிடிக்காத குப்பை தொட்டிகள் அமைக்கப்படும். சென்னையில் 50 இடங்களில் பொதுக்கழிப்பிடங்கள் அமைக்கப்படும்.
தமிழ்ப் பண்பாட்டை எடுத்துரைக்கும் சிலைகள் மேலும் பல இடங்களில் அமைக்கப்படும்.
கொடுங்கையூர் கால்வாய் குறுக்கே முத்தமிழ் நகரையும், காவிரி நகரையும் இணைக்கும் வாகனப்பாலம் அமைக்கப்படும்.
பொதுமக்கள் பாதுகாப்பாக சாலையை கடப்பதற்கு உதவும் வகையில் லிஃப்ட் வசதியுடன் கூடிய 5 புதிய பாதசாரி மேம்பாலங்கள் அமைக்கப்படும். செம்மொழி பூங்கா அமைந்துள்ள இடம், தியாகராய நகர் ரெங்கநாதன் தெரு மற்றும் பேருந்து நிலையம், புதுக்கல்லூரி அருகே பீட்டர் சாலை, நுங்கம்பாக்கம் ஹாடோஸ் சாலை ஆகிய 5 இடங்களில் இந்த புதிய பாதசாரி மேம்பாலங்கள் அமைக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
இதையடுத்து மாநகராட்சி நிதிக்குழு தலைவர் ராதா சம்பந்தம் வரவு, செலவு திட்டங்களை அறிவித்தார். இதில் புதிய வரிகள் ஏதும் அறிவிக்கப்படவில்லை.
2011-12ம் நிதியாண்டின் மொத்த வரவு ரூ.1943.76 கோடியாகவும், மொத்த செலவு ரூ.1945.16 கோடியாகவும், பற்றாக்குறை ரூ.1.40 கோடியாகவும் இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது.