தா.பாண்டியனுக்கு எதிராக போர்க்கொடி-நிர்வாகிகள் ராஜினாமா
சென்னை: இலங்கை அரசின் வாக்குறுதிகள் அனைத்தும் பொய் என்பதை நிரூபிக்கும் விதமாக 106 தமிழக மீனவர்கள் தற்போது சிறைபிடிக்கப்பட்டுள்ளனர் என்றும், அவர்கள் அனைவரையும் நிபந்தனையின்றி விடுதலை செய்ய மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் தா.பாண்டியன் கூறியுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், நாகபட்டினம் காரைக்கால் பகுதிகளை சேர்ந்த 106 மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் வங்க கடலில் 15.02.2011 செவ்வாய் கிழமை அன்று சிறைபிடிக்கப்பட்டுள்ளனர். நாளும் தொடரும் இலங்கை கடற்படையினரின் இத்தகைய அத்துமீறலை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி கடுமையாக கண்டிக்கிறது.
வங்க கடலில் மீன்பிடிக்க செல்லும் தமிழக மீனவர்கள் அடிக்கடி இலங்கை கடற்படையினரால் தாக்குதலுக்கு உள்ளாகி வருகின்றனர். மீன்பிடி வலைகளை அறுப்பது படகுகளை சேதப்படுத்துவது, மீன்களை அள்ளி செல்வது, கடலில் கொடுட்வது, துப்பாக்கியால் சுட்டு கொல்வது, சிதிரவதைகள் செய்வது என இலங்கை கடற்படையினரின் அத்துமீறல்கள், அட்டூழியங்கள் தொடர்கின்றன.
அண்மையில் மீன்பிடிக்க சென்ற வேதாரண்ய மீனவர் ஜெயகுமாரை இலங்கை கடற்படையினர் கயிற்றால் கழுத்தை இறுக்கி கொலை செய்து தங்கள் இன வெறியை வெளிப்படுத்தி உள்ளனர். இதனால் ஏற்பட்ட தமிழக மக்களின் கோபத்தை தணிக்கும் முயற்சியாக இந்திய வெளியுறவு செயலாளர் நிருபமா ராவ் இலங்கைக்குச் சென்றார். இதுபோல் தாக்குதல்கள், படுகொலைகள் நடைபெறாது என இலங்கை அரசு உறுதி கூறியதாகவும், தமிழக மக்களுக்கு அவர் அறிவித்தார்.
இலங்கை அரசின் வாக்குறுதிகள் அனைத்தும் பொய் என நிருபிக்கும் விதமாக 106 மீனவர்கள் தற்போது சிறைபிடிக்கப்பட்டுள்ளனர். இச்செயலை இந்திய அரசு கண்டிப்பதோடு யாழ்பாணம் பருத்தி சிறையில் உள்ள தமிழக மீனவர்கள் அனைவரையும் உடனடி நிபந்தனையின்றி விடுதலை செய்ய இலங்கை அரசை மத்திய அரசு நிர்ப்பந்திக்க வேண்டும்.
அத்துடன் இனியும் காலம் தாழ்த்தாமல் தமிழக மீனவர்களை பாதுகப்பதற்கு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி தமிழ்நாடு மாநிலக்குழு சார்பில் கேட்டுக்கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.
பாண்டியனுக்கு எதிராக கட்சியில் போர்க்கொடி:
இந் நிலையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழக தலைமையின் (தா.பாண்டியன்) போக்கைக் கண்டித்து, முன்னாள் எம்.பி உள்ளிட்ட 22 மாநில நிர்வாகிகள் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்துள்ளனர்.
இது தொடர்பாக கட்சியின் தேசிய, மாநில தலைமைக்கு கடிதம் அனுப்பியுள்ளனர்.
இதில் முன்னாள் திருப்பூர் எம்.பி சுப்பராயன், மாநிலக் குழு உறுப்பினர்கள் 18 பேரும் அடக்கம். கட்டுக்கோப்புக்குப் பேர் போன இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் இத்தனை நிர்வாகிகள் தேர்தல் நேரத்தில் பாண்டியனுக்கு எதிராக ஒரே நேரத்தில் குரல் தந்துள்ளது தேசியத் தலைமையை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.