ராசா-பல்வா மீது புதிதாக'420 கேஸ்': சிபிஐ தாக்கல்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: முன்னாள் தொலைத் தொடர்புத்துறை அமைச்சர் ராசா மற்றும் ஸ்வான் டெலிகாம் அதிபர் ஷாகித் உஸ்மான் பல்வா ஆகிய இருவர் மீதும், இந்திய தண்டனைச் சட்டம் 420 (ஏமாற்றுதல்), 468 (போலி ஆவணங்களை தயாரித்து மோசடி செய்தல்) ஆகிய பிரிவுகளில் கூடுதலாக 2 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக சிபிஐ தெரிவித்துள்ளது.

முறைகேடான 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் நாட்டுக்கு ரூ. 1.76 லட்சம் கோடி இழப்பு என்று தலைமை கணக்கு தணிக்கை அதிகாரி கூறியுள்ளார். ஆனால், அவ்வளவு இழப்பு ஏற்படவில்லை என்று மத்திய தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் கபில் சிபல் கூறியுள்ளார்.

இந் நிலையில் உச்ச நீதிமன்றத்தில் சிபிஐ தாக்கல் செய்த அறிககையில் ரூ, 22,000 கோடி வரை நஷ்டம் ஏற்பட்டிருக்கலாம் என்று கூறியிருந்தது.

இந் நிலையில் இது தொடர்பாக பாஜக தலைவர் முரளி மனோகர் ஜோஷி தலைமையிலான நாடாளுமன்ற பொது கணக்குக் குழு முன் சிபிஐ இயக்குனர் ஏ.பி. சிங் நேரில் ஆஜராகி விளக்கம் தந்தார். அவரிடம் சுமார் 1 மணி நேரம் விசாரணை நடந்தது. குழு உறுப்பினர்கள் எழுப்பிய பல்வேறு கேள்விகளுக்கு அவர் பதில் தந்தார்.

இது குறித்து ஜோஷி பின்னர் நிருபர்களிடம் பேசுகையில், முதலில் வருபவருக்கு முன்னுரிமை என்ற கொள்கை அடிப்படையில் ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு செய்ததில் அரசுக்கு இழப்பு ஏற்படவில்லை என்று கூறுவது தவறு என்று சிபிஐ இயக்குனர் ஏ.பி.சிங் எங்களிடம் தெரிவித்துள்ளார். ஆனால் எவ்வளவு இழப்பு ஏற்பட்டுள்ளது என்பதைச் சரியாகக் கூற முடியாது என்றும் சிங் கூறினார்.

இந்த ஒதுக்கீட்டில் ரூ. 1.76 லட்சம் கோடி இழப்பு என்று எந்த அடிப்படையும் இல்லாமல் தலைமை கணக்கு தணிக்கை கணித்துள்ளது தவறு என்று மத்திய தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் கபில் சிபல் கூறியிருப்பது சரியல்ல. இந்த விவகாரம் பொது கணக்குக் குழு முன் விசாரணையில் இருக்கும்போது அவர் இவ்வாறு கூறியிருப்பது நாடாளுமன்றத்தை அவமதிப்பது போலாகும்.

சிபிஐயிடம் மேலும் கூடுதல் தகவல்களை கேட்டுள்ளேன். பாஜகவைச் சேர்ந்த முன்னாள் தொலைத் தொடர்புத்துறை அமைச்சர் அருண் ஷோரியை விசாரணைக்கு அழைப்பது குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை. பொது கணக்குக் குழு உறுப்பினர்கள் இது குறித்து முடிவு செய்வார்கள்.

இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ள ஆ.ராசாவிடம் சி.பி.ஐ. விசாரணை நடத்தி வருகிறது. எனவே இந்த தருணத்தில் ராசாவை பொது கணக்கு குழு முன்பு ஆஜராகும்படி நாங்கள் கூறவில்லை.

பொது கணக்குக் குழு முன் ஆஜராகி விளக்கம் அளிக்கத் தயார் என்று பிரதமர் விருப்பம் தெரிவித்துள்ளார். அது குறித்து முடிவு எடுக்கும்போது உங்களுக்குத் தெரிய வரும். நாங்கள் கேட்கும் பல கேள்விகளுக்கு பிரதமர் அலுவலகம் முழுமையான தகவல்களை அளித்து ஒத்துழைப்பு கொடுத்து வருகிறது என்றார் ஜோஷி.

இந்தக் குழு, மத்திய அரசின் தலைமை கணக்குத் தணிக்கை அதிகாரி, தொலைத் தொடர்புத்துறை துறை செயலர்களிடம் ஏற்கனவே விசாரணை நடத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

ராசா மீது மேலும் 2 வழக்குகள் பதிவு:

இந் நிலையில் ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில், முன்னாள் அமைச்சர் ராசா மீது மேலும் 2 வழக்குகளை சிபிஐ பதிவு செய்துள்ளது.

நேற்று முன்தினம் ராசா சிபிஐ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு அவரது சிபிஐ காவல் மேலும் 4 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டது. அப்போது நீதிமன்றத்தில் சிபிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்ட தகவலில்,

ராசா மற்றும் கைது ஸ்வான் டெலிகாம் அதிபர் ஷாகித் உஸ்மான் பல்வா ஆகிய இருவர் மீதும், இந்திய தண்டனைச் சட்டம் 420 (ஏமாற்றுதல்), 468 (போலி ஆவணங்களை தயாரித்து மோசடி செய்தல்) ஆகிய பிரிவுகளில் கூடுதலாக 2 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக சிபிஐயின் வழக்கறிஞர் அகிலேஷ் தெரிவித்தார். இந்த குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால், அதிகபட்சம் 7 ஆண்டுகள் சிறை தண்டனை கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக ராசா மீது ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் மட்டுமே வழக்குப் பதிவு செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. இப்போது 420 வழக்கும் பாய்ந்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+