136 தமிழக மீனவர்கள் விடுதலை...இலங்கை மீனவர்கள் எதிர்ப்பு!!
யாழ்ப்பாணம்: ரூ 1.15 லட்ச ரூபாய் மதிப்புள்ள கடல் வளத்தை அழித்த தமிழக மீனவர்கள் 136 பேரை இலங்கை அரசு விடுவித்தது தவறு என்று எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர் இலங்கையின் வடபகுதி மீனவர்கள்.
இதுகுறித்த தங்கள் எதிர்ப்பை யாழ்ப்பாணத்தில் ஆர்ப்பாட்டமாகவும் அவர்கள் வெளிப்படுத்தியதாக இலங்கை தமிழ் இணையதளங்கள் தெரிவித்துள்ளன.
இந்தியப் பெருங்கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த இந்திய தமிழ் மீனவர்களை, தங்கள் நாட்டு கடல் எல்லையில் நுழைந்ததாகக் குற்றம்சாட்டி கைது செய்தது இலங்கை ராணுவம். இவர்கள் அனைவரும் விசாரணைக்காக சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர்.
இந்த செய்தி இந்திய தமிழ் மீனவர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருந்தது. ஆர்ப்பாட்டங்களும் போராட்டங்களும் தொடர்ந்து நடந்து வருகின்றன. இந்த நிலையில், கைது செய்யப்பட்ட இந்திய தமிழ் மீனவர்கள் அனைவரும் நேற்று விடுதலை செய்யப்பட்டனர். அவர்கள் இன்று காலை தமிழகம் வந்து சேர்ந்தனர்.
இவ்வாறு அவர்கள் விடுதலை செய்யப்பட்டதற்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர் இலங்கையின் வட பகுதி மீனவர்கள் என்ற செய்தி இப்போது வெளியாகியுள்ளது.
"தங்களுடைய கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து ஒரு கோடியே 15 லட்சம் ரூபாய் பெறுமதியான கடல் வளங்களை அழித்த இந்திய மீனவர்களை எந்தவொரு தண்டனையும் இல்லாமல் விடுதலை செய்துள்ளது தங்களுக்கு பெரும் அதிருப்தி அளிப்பதாக. இது தொடரக் கூடாது. இந்திய தமிழ் மீனவர்கள் எல்லை தாண்டினால் தண்டிக்கப்பட வேண்டும்," என வட மாகாண கடல் தொழிலாளர் சங்கத் தலைவர் எஸ்.தவரட்ணம் தெரிவித்துள்ளதாக அந்த செய்திகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.