அரசு வேலைக்கு போலி நியமன உத்தரவு கொடுத்த 3 பேர் கைது
அம்பாசமுத்திரம்: அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ. 2. 68 லட்சம் பெற்றுக் கொண்டு போலி நியமன உத்தரவு கொடுத்த 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் புதுக்கிராமம் தெருவைச் சேர்ந்த நயினார் மகன் பாலகிருஷ்ணன். சிவகிரி அரசு மருத்துவமனையில் பணியாற்றி விருப்ப ஓய்வு பெற்றார்.
இவர் அம்பாசமுத்திரம் முடப்பாலத்தைச் சேர்ந்த முத்துராஜ், புளியங்குடியைச் சேர்ந்த மகாலிங்கம், சங்கரன்கோவில் குருவிகுளம் புதுப்பட்டியைச் சேர்ந்த அம்பலம், சங்கரன்கோவில் சங்குபுரத்தைச் சேர்ந்த நடனகுரு, கனகராஜ், ஆகியோரிடம் மருத்துவம் மற்றும் மீன்வளத்துறையில் அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ. 2.68 லட்சம் பெற்றுள்ளார். பணத்தை பெற்ற பாலகிருஷ்ணன் தென்காசி து்ணை இயக்குனர் அலுவலகத்தில் ஓஏவாக பணியாற்றி வரும் கல்லிடைக்குறிச்சி குமாரகோவிலைச் சேர்ந்த பிச்சையா, பிரமதேசத்தைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் என்ற கிட்டப்பா உதவியுடன் போலி ரப்பர் ஸ்டாம்புகளை தயார் செய்து வேலைக்கான உத்தரவை வழங்கினார்.
பணி நியமன உத்தரவை பெற்றவர்கள் பணியில் சேர முயன்றபோது தங்களுக்கு வழங்கப்பட்டது போலி நியமன ஆணை என்றும், தாங்கள் ஏமாற்றப்பட்டதும் தெரிய வந்தது. இது குறித்து அம்பாசமுத்திரம் போலீசில் புகார் செய்தனர். அம்பாசமுத்திரம் போலீசார் விசாரணை நடத்தி பாலகிருஷ்ணன், பிச்சையா, இன்னொரு பாலகிருஷ்ணன் என்ற கிட்டப்பா ஆகி்யோரை கைது செய்தார்.