தேர்தல் பிரச்சாரத்தில் ஹெலிகாப்டர்களை பயன்படு்த்த தேர்தல் ஆணையம் புதிய கட்டுப்பாடு
ஹெலிகாப்டர்களுக்கு செலுத்தப்படும் கட்டணம் வேட்பாளரின் கணக்கிலேயே சேரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
எந்த வேட்பாளருக்காவது பிரச்சாரம் செய்யச் செல்வதற்காக ஹெலிகாப்டரை எந்த விஐபி பயன்படுத்தினாலும் அந்தச் செலவு வேட்பாளரின் கணக்கிலேயே சேர்க்கப்படும். அதே போல கூட்டணிக் கட்சியின் வேட்பாளருக்காக பிரச்சாரம் செய்ய விஐபி ஹெலிகாப்டரை பயன்படுத்தினாலும் அந்தச் செலவும் வேட்பாளரின் கணக்கிலேயே சேர்க்கப்படும்.
வழக்கமாக தேர்தலில் ஹெலிகாப்டரை அதிகமாக பயன்படுத்துவது காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, மூத்த பாஜக தேசியத் தலைவர்கள் ஆகியோர் தான். அதே போல தமிழக அளவில் ஹெலிகாப்டர் பயன்படுத்தும் ஒரே தலைவர் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா தான் என்பது குறிப்பிடத்தக்கது.
துப்பாக்கிகளை ஒப்படைக்க உத்தரவு:
இந் நிலையில் சென்னை போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ஏப்ரல் 13ம் தேதி அன்று நடைபெறவிருக்கும் பொதுத் தேர்தலையொட்டி, நடத்தை விதிகள் உடனடியாக அமுலுக்கு வருகின்றன. சென்னை நகரில் உரிமம் பெற்று துப்பாக்கி வைத்திருப்பவர்கள், தங்கள் துப்பாக்கிகளை உடனடியாக அந்தந்த காவல் நிலையங்களிலோ, எழும்பூர் ஆயுதப் படையின் ஆயுதக் கிடங்கிலோ அல்லது உரிமம் பெற்ற தனியார் ஆயுதக்கிடங்கிலோ ஒப்படைக்கவேண்டும்.
தனியார் ஆயுதக்கிடங்கில் ஒப்படைக்கும் உரிமதாரர்கள், அவ்வாறு ஒப்படைத்தற்கான ரசீதை சம்பந்தப்பட்ட காவல் நிலையத்தில் சமர்ப்பிக்க வேண்டும். மார்ச் 15ம் தேதிக்குள் துப்பாக்கிகள் கண்டிப்பாக ஒப்படைக்கப்பட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.