தேர்தல் பிரச்சார நேரத்தை இரவு 11 மணி வரை நீட்டிக்க திமுக கோரிக்கை
சென்னை: தமிழக சட்டசபை தேர்தலுக்கான அவகாசம் குறைவாக இருப்பதால், பிரச்சார நேரத்தை இரவு 11 மணுவரை நீட்டிக்க திமுக-பாமக கட்சிகள் தேர்தல் ஆணையத்திடம் கோரிக்கை வைத்தன.
தமிழக சட்டசபை தேர்தல் தொடர்பாக ஆலோசிப்பதற்காக அங்கீகரிக்கப்பட்ட அரசியல்கள் கட்சிகளின் கூட்டத்தை தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன்குமார் நேற்று கூட்டியிருந்தார்.
சுமார் 21/2 மணி நேரம் நடந்த இந்தக் கூட்டத்தில், தேர்தல் விதிகள் மற்றும் நடைமுறைகள் பற்றிய விளக்கங்களை வீடியோ படக் காட்சிகள் மூலம் தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன்குமார் விரிவாக எடுத்துக் கூறினார்.
கூட்டம் முடிந்து வெளியே வந்த அரசியல் கட்சியினர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர்.
அமைச்சர் பொன்முடி (தி.மு.க.): தேர்தல் நியாயமாக நடைபெறுவதற்கு தேவையான அனைத்து உதவிகளையும் தி.மு.க. சார்பில் தேர்தல் ஆணையத்திற்கு செய்வோம் என்று குறிப்பிட்டிருக்கிறோம். தேர்தல் ஆணையம் தேர்தல் தேதியை நிர்ணயித்துவிட்ட காரணத்தினால், அதே தேதியில் தேர்தல் நடத்தினாலும் அந்த தேர்தலை சந்திக்க தி.மு.க. தயாராக இருக்கிறது. பிரசார நேரத்தை, கிராமம், நகரம் என்று இல்லாமல் அனைத்து இடத்திலும் இரவு 11 மணி வரை நீட்டிக்க வேண்டும் என்று கேட்டுள்ளோம்.
பீட்டர் அல்போன்ஸ் எம்.எல்.ஏ. (காங்கிரஸ்): வேட்பாளர்கள் அல்லது அரசியல் கட்சிகளின் தவறான நடத்தை இருந்தால் உடனே தகவல் சொல்ல வசதியாக கட்டணமில்லா தொலைபேசி எண்ணை கொடுக்கிறார்கள்.
அதிலே சொன்னால் உடனே நடவடிக்கை எடுக்கப்படும் என்று தலைமை தேர்தல் அதிகாரி தெரிவித்தார். ஒரு குறிப்பிட்ட வேட்பாளரின் பிரச்சாரத்தை முடக்குவதற்காகவோ அல்லது ஒரு அரசியல் கட்சியின் பிரசாரத்தை முடக்குவதற்காகவோ யாராவது தவறாக அந்த மாதிரி புகார் கொடுத்தால் அவர்கள் மீது அதற்கும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுள்ளோம்.
சுவர் விளம்பரங்கள் செய்ய ஒவ்வொரு வீட்டுக்கும் கலெக்டரிடம் அனுமதி வாங்குவது கால விரயத்தை ஏற்படுத்தும். எனவே, மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் அதற்காக தனியே ஒரு அதிகாரியை நியமனம் செய்ய வேண்டும் என்று கேட்டு கொண்டோம்.
வக்கீல் பாலு (பா.ம.க.): தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள தேதியில், தேர்தலை சந்திக்க பா.ம.க. தயாராக உள்ளது. தேர்தல் பிரசார நேரத்தை இரவு 11 மணி வரை நீட்டிக்க வேண்டும் என்று கேட்டுள்ளோம். அதை பரிசீலிப்பதாக தலைமை தேர்தல் அதிகாரி சொல்லியுள்ளார்.
டாக்டர் தமிழிசை சவுந்தர்ராஜன் (பா.ஜ.க.): பள்ளிக்கூடத் தேர்வு நடக்கிறது, புத்தாண்டு பிறக்க இருக்கிறது. எனவே, ஏப்ரல் 13-ந் தேதி தேர்தல் வேண்டாம் என்று தமிழக பா.ஜ.க. தலைவர் பொன். ராதாகிருஷ்ணனின் கோரிக்கையை சொல்லி இருக்கிறோம். ஏனென்றால், தேர்தல் தேதியும், தேர்வுகள் தேதியும் மோதிக் கொள்கிறது. இது சில கட்சிகளின் கோரிக்கை அல்ல. அனைத்து கட்சிகளின் கோரிக்கை. ஆனால், தேர்தல் ஆணையம் ஏற்க மறுக்கிறது.
இருந்தபோதிலும் மறுபடியும் கோரிக்கை வைத்திருக்கிறோம். அதுமட்டுமல்ல ஓட்டுக்கு நோட்டு கொடுக்கும் பழக்கமும், வன்முறை இல்லாத நல்ல தேர்தலும் நடைபெற வேண்டும் என்றும் கோரிக்கை வைத்திருக்கிறோம்.
நேர்மையான முறையில், ஜனநாயக முறையில் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்று கேட்டுள்ளோம். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களிடம் இப்போது அடையாள அட்டை இல்லை. அனைவருக்கும் வாக்காளர் அடையாள அட்டை கிடைக்கச் செய்ய வேண்டும்.
பாலகிருஷ்ணன் (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு): எங்கள் கட்சி சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வைத்திருக்கிறோம். குறிப்பாக தேர்தல் தேதியை மாற்ற வேண்டும். ஏனென்றால், 10 லட்சம் பேர் தேர்வு எழுதும் நேரத்தில் தேர்தலை நடத்தினால், அது அவர்களது கல்வியையும், எதிர்காலத்தையும் பாதிக்கும் என்று குறிப்பிட்டோம்.
முன்னாள் எம்.எல்.ஏ. பழனிசாமி (இந்திய கம்யூனிஸ்டு): மே முதல் வாரத்தில் தேர்தல் நடத்த வேண்டும். வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு, தங்களது அடையாள அட்டைகளை 30 லட்சம் பேர் இழந்திருக்கிறார்கள். அந்த அடையாள அட்டைகளை வழங்கிய பிறகு இந்த தேர்தலை நடத்துவது சரியாக இருக்கும்.