மருத்துவ நுழைவுத் தேர்வை எதிர்த்துப் பாமக போராட்டம்
சென்னை: மருத்துவப் படிப்பிற்கான பொது நுழைவுத் தேர்வை எதிர்த்து வரும் 14-ம் தேதி சைதாப்பேட்டையில் பாமக சார்பில் தொடர் முழக்க போராட்டம் நடத்தப்படும் என்று பாமக தலைவர் ஜி.கே.மணி தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
மருத்துவம், பொறியியல் போன்ற தொழிற்படிப்புகளுக்கு நுழைவுத் தேர்வு நடத்தப்பட்டு வந்ததால் தான் ஏழை எளியகுடும்பங்கள் மற்றும் கிராமப்புற பகுதிகளைச் சேர்ந்த மாணவர்களால் தொழில் கல்லூரிகளுக்குள் நுழையமுடியவில்லை என்பதை தமிழக அரசு உணர்ந்தது. அதனால் தான் தொழில் படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வை ரத்து செய்து உத்தரவு பிறப்பித்தது.
தமிழக அரசின் இந்த நடவடிக்கையால் தமிழகத்தைச் சேர்ந்த பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மற்றும் சிறுபான்மை சமுதாயங்களைச் சேர்ந்த மாணவர்களும், ஏழை எளிய குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களும் தொழிற் படிப்புகள் படிக்க வாய்ப்பு ஏற்பட்டது. அதன் பலனை கடந்த சில ஆண்டுகளாகத் தமிழகம் அனுபவித்து வருகிறது.
இந்த நிலையில் மருத்துவ படிப்புகளுக்கு அனைத்திந்திய அளவில் மீண்டும் பொது நுழைவுத் தேர்வு நடத்தப்படும் என்று கூறப்படுகிறது..
இந்த பொது நுழைவுத் தேர்வு மீண்டும் நடைமுறைப்படுத்தப்பட்டால் ஏழை எளிய மக்களுக்கு தொழிற் கல்வி என்பது எட்டாக் கனியாகிவிடும். டெல்லி, மும்பை, கொல்கத்தா, ஹைதராபாத், பெங்களூர் போன்ற பெருநகரங்களைச் சேர்ந்த பணக்கார குடும்பத்து மாணவர்கள் மட்டும்தான் மருத்துவப் படிப்புகளை படிக்க முடியும் என்ற சூழல் ஏற்படும்.
ஐ.ஐ.டி., ஐ.ஐ.எம். போன்ற உயர்கல்வி நிறுவனங்களில் நுழைவுத் தேர்வு அடிப்படையில் தான் மாணவர்கள் சேர்க்கை நடைபெறுகிறது. அதனாலேயே அங்கு மேற்கண்ட பெருநகரங்களைச் சேர்ந்தவர்களும், வடமாநிலங்களைச் சேர்ந்தவர்களும் தான் அதிக அளவில் படிக்கிறார்கள்.
இந்த கல்வி நிறுவனங்களில் தமிழக மாணவர்களுக்கு அதிக வாய்ப்புகள் கிடைக்கவில்லை.எனவே தான் மருத்துவப் படிப்புக்கான நுழைவுத் தேர்வு பற்றிய அறிவிப்பு வந்ததுமே அதை பாமக கடுமையாக எதிர்த்தது. தமிழ்நாட்டில் மருத்துவப் படிப்புக்கு நுழைவுத் தேர்வு தேவையில்லை என்று தமிழக அரசும் வேண்டுகோள் விடுத்தது.
மருத்துவப் படிப்புக்கு நுழைவுத் தேர்வு கூடாது என்பதை வலியுறுத்தி வரும் 14-ம் தேதி காலை 10 மணிக்கு சைதாப்பேட்டை பனகல் மாளிகை எதிரில் பாமக நிறுவனர் டாக்டர். ராமதாஸ் தலைமையில் தொடர் முழக்கப் போராட்டம் நடைபெறும். இந்த போராட்டத்தில் பாமக-வினரும், கல்வி ஆர்வலர்களும் கலந்துகொள்வார்கள்.
இதில் பாட்டாளி மக்கள் கட்சியினரும், அதன் துணை அமைப்புகளைச் சேர்ந்தவர்களும் கட்டாயம் கலந்துகொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.