காங்கிரஸுக்கு ஒரு சீட்டை பறித்துக் கொடுத்ததற்கு முஸ்லீம் லீக் மகளிர் அணி எதி்ர்ப்பு
சென்னை: இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு ஒதுக்கப்பட்ட 3 சீட்களில் ஒன்றை காங்கிரஸுக்கு விட்டுக் கொடுக்கும் கட்சி மேலிட முடிவை எதிர்த்து மூத்த பெண் தலைவர் குரல் கொடுத்துள்ளார்.
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் பெண்கள் பிரிவின் ஒருங்கிணைப்பாளர் பாத்திமா முசாபர். இவர் மறைந்த அப்துல் சமதின் மகளாவார். வரும் சட்டசபை தேர்தலில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் திமுக கூட்டணியில் உள்ளது. அக்கட்சிக்கு திமுக 3 சீட் ஒதுக்கியிருந்தது. ஆனால் காங்கிரஸுக்கு 63 சீட் கொடுக்க தீர்மானித்ததால் சீட் பற்றாக்குறை ஏற்பட்டது. இதையடுத்து இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு ஒதுக்கிய 3 சீட்களில் ஒன்றை திமுக வாங்கி காங்கிரஸுக்குக் கொடுத்துள்ளது.
இதற்கு பாத்திமா எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் கூறுகையில்,
ஒரு சீட்டை திரும்ப எடு்த்துக் கொள்ள அனுமதித்ததன் மூலம் கட்சி தனது பெருமை மற்றும் தன்மானத்தை விட்டுக் கொடுத்துள்ளது.
கட்சி தலைமையின் இந்த முடிவு பாரபட்சமானது, ஒருதலையானது. இதற்கு பொறுப்பேற்று கட்சியின் தேசிய தலைவரும், மத்திய அமைச்சருமான இ. அகமது, மாநில தலைவர் காதர் முகைதீன் ஆகியோர் தங்களது பதவிகளை ராஜினாமா செய்ய வேண்டும்.
நாங்கள் திமுக மற்றும் காங்கிரஸ் மேலிடங்களுக்கு எதிரானவர்கள் அல்ல. ஒரு சீட்டை விட்டுக் கொடுத்துள்ள எங்கள் கட்சி மேலிடத்தின் முடிவு முஸ்லிம் சமுதாயம் மற்றும் கட்சியினர் இடையே ஏமாற்றத்தை அளித்துள்ளது என்றார்.