அதிமுக கூட்டணியிலிருந்து விலக சிபிஎம் முடிவு?-பெரும் குழப்பத்தில் மதிமுக, சிபிஐ
சென்னை: அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா, தொகுதிகள் பங்கீ்ட்டில் அனாவசியமாக தாமதம் செய்து வருவதால் கடும் அதிருப்தி அடைந்துள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பேசாமல் கூட்டணியை விட்டு விலகி விடலாமா என்று யோசித்து வருகிறதாம். இதனால் மதிமுக, சிபிஐ ஆகிய கட்சிகள் உச்சகட்ட குழப்பத்திற்கு தள்ளப்பட்டுள்ளன.
போயஸ் தோட்டத்திற்கு விசிட் அடிக்கிற கட்சிகளுக்கெல்லாம் ஜெயலலிதா சீட் கொடுத்து அனுப்பிக் கொண்டிருக்கிறார். திடீரென வந்த சரத்குமாரிடம் 2 தொகுதிகளைத் தூக்கிக் கொடுத்தார். கொங்கு இளைஞர் பேரவைக்கு ஒரு சீட் கொடுத்துள்ளார். ஆனால் மதிமுக, சிபிஎம், சிபிஐ குறித்து அவர் வாயே திறக்காமல் இருக்கிறார். இதனால் அந்தக் கட்சிகளைச் சேர்ந்தவர்கள் பெரும் அவமரியாதைக்குள்ளாகி வருகின்றனர்.
இதனால் வெகுண்டுள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இன்று மாநில குழுக் கூட்டத்தை அவசரமாக கூட்டியுள்ளது.இக்கூட்டத்தில் தொகுதிப் பங்கீட்டுக்கு காலக்கெடு விதித்து தீர்மானம் நிறைவேற்றப்படலாம் என்று தெரிகிறது. அதற்குள் அதிமுக முடிவெடுக்காவிட்டால் தனித்துப் போட்டி அல்லது மூன்றாவது அணி அமைப்பது என்ற முடிவுக்கு சிபிஎம் வரலாம் என்று தெரிகிறது.
சிபிஎம்மின் இந்த திடீர் திட்டம் சிபிஐ மற்றும் மதிமுகவை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளன. சிபிஎம் ஒரு முடிவு எடுத்தால் அதை சிபிஐயும் பின்பற்றும் என்று தெரிகிறது. அப்படி நடந்தால் அவர்களுடன் மதிமுகவும் வெளியேறும் என்று கூறப்படுகிறது.
இவர்கள் மூவரும் தனியாகப் பிரிந்தால் அவர்களுடன் சீமான் கட்சியும் விலகி வரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையே அதிமுக 144 தொகுதிகளில் போட்டியிட திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அதிமுக கூட்டணியில் மதிமுக, கம்யூனிஸ்ட் கட்சிகள் நீடிக்கும் பட்சத்தில், மீதமுள்ள 38 தொகுதிகளைத்தான் அவர்கள் பிரித்துக் கொள்ள வேண்டும் என்ற சூழல் உருவாகியுள்ளது.