தேர்தல்: 420 பள்ளி லேப்டாப்கள் தேர்தல் அலுவலகத்தில் ஒப்படைப்பு
தூத்துக்குடி: தூத்துக்குடி மாவடத்தில் உள்ள பள்ளிகளில் இருந்து 420 லேப்டாப்கள் மாவட்ட தேர்தல் அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
தூத்துக்குடி மாவட்டத்தில் தேர்தல் பணிக்காக மாவட்டம் முழுவதும் உள்ள பள்ளிகளிலிருந்து லேப்டாப்களை பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இதனை அடுத்த நடந்த ஆலோசனை கூட்டத்தில் பள்ளிகளில் உள்ள லேப்டாப்களை மாவட்ட தேர்தல் அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டது.
இதையடுத்து கல்வித்துறை அதிகாரிகள் மூலம் மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து பள்ளிகளில் இருந்து 420 லேப்டாப்கள் மாவட்ட தேர்தல் அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
இவற்றின் பேட்டரி பேக் அப்களை பொறுத்தே இவை அனைத்தும் தேர்தல் பணிக்காக பயன்படுத்தப்படும். இது தவிர பள்ளிகளில் உள்ள 363 சதாரண கம்யூட்டர்களும் தேர்தலுக்காக பயன்படுத்தப்படுகின்றன. இந்த லேப்டாப்கள் பதற்றமான வாக்குசாவடிகளில் பயன்படுத்தப்படுகின்றன. இவற்றுக்கு பிராட்பேண்ட் சேவை பிஎஸ்என்எல் மூலம் வழங்கப்படுகிறது.
பதட்டமான வாக்குசாவடிகளில் துணை ராணுவ பாதுகாப்பு வழங்கப்படாத மற்றும் மைக்ரோ அப்சவர்கள் இல்லாத வாக்குச் சாவடிகளில் வாக்குப் பதிவை வீடியோவில் பதிவு செய்ய இந்த லேப்டாப்கள் மற்றும் கம்யூட்டர்கள் பயன்படுத்தப்படுகின்றன.இவற்றை இயக்க மாவட்டத்தில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் இருந்து மாணவர்கள் தேர்வு செய்யும் பணி நடந்து வருகிறது.
257 குஜராத் போலீசார் நெல்லை வருகை:
தமிழக சட்டசபை தேர்தல் ஏப்ரல் மாதம் 13-ம் தேதி நடக்கிறது. தேர்தல் பாதுகாப்பு பணியில் மாநில போலீசாருடன் மத்திய ரிசர்வ் போலீஸ் மற்றும் வெளிமாநில போலீசாரும் ஈடுபடுத்தப்பட உள்ளனர். தேர்தல் பாதுகாப்பு பணிக்காக முதல்கட்டமாக குஜராத்திலிருந்து 2 டிஎஸ்பிகள் தலைமையில் 7 எஸ்ஐக்கள் உள்பட 257 ஆயுதப்படை போலீசார் நேற்று மாலை 6 மணிக்கு தனி ரயிலில் நெல்லைக்கு வந்தனர்.
ஏ, பி என இரு கம்பெனி பட்டாலியன்கள் வந்துள்ளனர். இதில் சி கம்பெனி பட்டாலியன்கள் பாதிபேர் வந்துள்ளனர். இவர்கள் கடந்த 11-ம் தேதி தனி ரயிலில் நெல்லைக்கு புறப்பட்டனர். பாளை மற்றும் பெருமாள்புரத்தில் உள்ள இரு திருமண மண்டபங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இவர்களை பாளை ஆயுதபடை உதவி கமிஷனர் தர்மலிங்கம் வரவேற்றார்.