தரை மட்டமானது ஜெயலலிதாவின் தேர்தல் அலுவலகம்!
திருச்சி: விதிகளை மீறிக் கட்டப்பட்டதாக, ஜெயலலிதாவின் ஸ்ரீரங்கம் தேர்தல் அலுவலகத்தை தரைமட்டமாக்கினார்கள் தேர்தல் ஆணைய அதிகாரிகள்.
வரும் சட்டமன்ற தேர்தலில் அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா திருச்சி ஸ்ரீரங்கம் தொகுதியில் போட்டியிடுகிறார். இதற்காக அவர் ஸ்ரீரங்கத்தில் வரும் 24ம் தேதி தேர்தல் பிரச்சாரத்தை ஆரம்பிக்கிறார்.
ஸ்ரீரங்கத்தில் உள்ள அம்மா மண்டபம் சந்திரிகா திருமண மண்டபம் அருகே அதிமுகவின் தேர்தல் அலுவலகம் அமைக்கப்பட்டிருந்தது. ஜெயலலிதாவின் ஜோதிடர் சொன்ன ஆலோசனைப்படி நல்ல நேரம் பார்த்து முகூர்த்தகால் நட்டு இந்த அலுவலகம் அமைக்கப்பட்டது.
தேர்தல் அலுவலகத்தில் ஆரம்பித்து சுவர் விளம்பரமும் செய்யப்பட்டது. இந்த விளம்பரமும் ஜெயலலிதாவின் ஆலோசனைப்படிதான் எழுதப்பட்டதாம். பிரச்சாரத்தின் போது இந்த அலுவலகத்தில் சில நிமிடங்கள் தங்கியிருக்கவும் ஜெயலலிதா முடிவு செய்திருந்தார். ஜோதிடர் ஆலோசனைப்படி, அக்ரஹாரத்து வீடொன்றில் கொஞ்சநேரமாவது ஜெயலலிதா தங்கியிருக்க வேண்டுமாம். அப்போதுதான் அவருக்கு வெற்றி கைகூடி வருமாம்!
ஆனால் நேற்று நள்ளிரவு தேர்தல் கமிஷன் அதிகாரிகள் ஸ்ரீரங்கம் அதிமுகவின் அலுவலகத்துக்கு விரைந்தனர். இந்த இடத்தில் தேர்தல் அலுவலகம் அமைக்கக்கூடாது என்று உத்தரவிட்டனர். மேலும் அந்த அலுவலகத்தை இருந்த இடமே தெரியாத அளவுக்கு தரைமட்டமாக்கி விட்டார்கள். சுவர் விளம்பரங்கள் அனைத்தும் உடனே அழிக்கப்பட்டன.
இதுகுறித்து அதிமுக தரப்பில் புகார் செய்யப்பட்டுள்ளது.