கிள்ளியூர், வேலூர், சோளிங்கரில் போட்டி வேட்பாளர்கள்-குழப்பத்தில் காங்.
சென்னை: தமிழகத்தில் பல்வேறு தொகுதிகளில் காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு எதிராக வெடித்துள்ள போராட்டங்களால் அவர்களின் வெற்றி வாய்ப்பு கேள்விக்குறியாகியுள்ளது. இந்த நிலையில் 3 தொகுதிகளில் காங்கிரஸ் வேட்பாளர்களை எதிர்த்து வலுவான தலைவர்கள் போட்டி வேட்பாளர்களாக களம் இறங்கியுள்ளதால் பரபரப்பு அதிகரித்துள்ளது.
கூட்டணி அரசியலுக்கு காங்கிரஸ் மாறிய பின்னர் இதுவரை இல்லாத அளவுக்கு அதிக அளவிலான தொகுதிகளில் இம்முறை போட்டியிடுகிறது. ஆனால் 63 தொகுதிகளை வெற்றிகரமாக வாங்கிய காங்கிரஸால் கோஷ்டிப் பூசலையும், வேட்பாளர் தேர்வில் பெரும் அமளியையும் தடுக்க முடியவில்லை.
தங்கபாலு, ஜி.கே.வாசன், ஈவிகேஎஸ். இளங்கோவன், ப.சிதம்பரம் என ஒவ்வொரு கோஷ்டியினரும் தத்தமது ஆதரவாளர்களை தேர்தலில் நிறுத்த கடுமையாக முயன்று அடித்துக் கொண்டதைப் பார்த்து காங்கிரஸ் மேலிடம் கதி கலங்கிப் போய் விட்டது.
63 சீட்களில் வாசன் கோஷ்டியினர் 22 இடங்களைப் பிடித்துக் கொண்டனர். ஆனால் யாரும் எதிர்பாராத வகையில் தங்கபாலு கோஷ்டி 13 இடங்களை வாங்கி விட்டதால் மற்ற கோஷ்டியினர் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர். தங்கபாலு கோஷ்டியின் வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டுள்ள இடங்களில் மோதல்கள் வெடித்துள்ளன. இது போக சில தொகுதிகளில் தாங்கள் எதிர்பார்த்த வேட்பாளர்கள் அறிவிக்கப்படாததால் அங்கும் போர்க்கொடி உயர்த்தியுள்ளனர் காங்கிரஸார்.
காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ள பல தொகுதிகளில் கடும் மோதல் வெடித்திருப்பதால் இங்கு போட்டியிடும் அதிமுக கூட்டணியினர் பெரும் உற்சாகமடைந்துள்ளனர். அதிருப்தி காங்கிரஸாருடன் கை கோர்த்து உள்ளடி வேலைகளில் அவர்கள் ஈடுபடத் தொடங்கியுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
மேலும் தங்கபாலு ஆதரவு வேட்பாளர்களை கவிழ்க்க அந்தத் தொகுதிகளைச் சேர்ந்த பிற கோஷ்டி காங்கிரஸார் கை கோர்த்து களம் இறங்கியுள்ளனராம்.
தங்கபாலுவுக்கு எதிராக வெடித்துள்ள இந்தப் போராட்டம் தற்போது காங்கிரஸ் கட்சியின் வெற்றியின் அடித்தளத்தை ஆட்டுவிக்கும் வகையில் உருமாறியிருப்பதால் இவர்களுக்கு இத்தனை சீட்டைப் போய் கொடுத்து விட்டோமோ என்ற கவலையில் திமுகவினரைத் தள்ளியுள்ளதாக தெரிகிறது.
தற்போதைய நிலையில் மயிலாப்பூர், திருத்தணி, கிருஷ்ணகிரி, விளவங்கோடு, திரு.வி.க.நகர், மணப்பாறை, குளச்சல் உள்பட கிட்டத்தட்ட 10க்கும் மேற்பட்ட தொகுதிகளில் தங்கபாலுவுக்கு எதிராக காங்கிரஸார் கொதித்துப் போய் போராட்டங்களில் குதித்துள்ளனர். இங்கு காங்கிரஸ் வெற்றி பெறுவது சந்தேகம் என்று உள்ளூர்களில் பேச்சு அடிபடுகிறது.
இந்த நிலையில் இதில் திருத்தணி, கிருஷ்ணகிரி, குளச்சல் தொகுதி வேட்பாளர்களை மட்டும் காங்கிரஸ் மேலிடம் மாற்றியுள்ளது.
3 தொகுதிகளில் போட்டி வேட்பாளர்கள்:
இந்த நிலையில் 3 முக்கிய தொகுதிகளில் போட்டி வேட்பாளர்கள் களம் இறங்கியுள்ளதால் கலாட்டா விஸ்வரூபம் எடுத்துள்ளது.
கிள்ளியூர் தொகுதி வேட்பாளராக நியமிக்கப்பட்டிருந்த ஜான் ஜேக்கப்பை எதிர்த்து டாக்டர் குமாரதாஸ் மனு தாக்கல் செய்துள்ளார். இவர் முன்னாள் எம்.எல்.ஏ ஆவார்.
வேலூரில் ஞானசேகரனை எதிர்த்து வாலாஜா அசேன் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார்.
அதேபோல சோளிங்கர் தொகுதியில், அருள் அன்பரசுவை எதிர்த்து வேலூர் கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் முனிரத்தினம் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார்.
காங்கிரஸில் தொடரும் இந்த குழப்பங்களால் அக்கட்சி வேட்பாளர்களின் வெற்றி வாய்ப்பு பெரும் குளறுபடியாகியுள்ளது.