டெஸ்மா... எஸ்மா... அம்மம்மா! - முக ஸ்டாலின் அதிரடி பிரச்சாரம்
சட்டசபை தேர்தலில் போட்டியிடும் தி.மு.க மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து துணை முதல்வரும், தி.மு.க. பொருளாளருமான மு.க.ஸ்டாலின் நேற்று முன்தினம் புதுக்கோட்டையில் பிரசாரத்தை தொடங்கினார். 2-வது நாளான நேற்று அவர் சிவகங்கை மாவட்டத்தில் பிரசாரம் செய்தார்.
மானாமதுரை தொகுதி தி.மு.க. வேட்பாளர் தமிழரசி, திருப்பத்தூர் தி.மு.க. வேட்பாளர் கே.ஆர்.பெரியகருப்பன், சிவகங்கை தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ராஜசேகரன், காரைக்குடி காங்கிரஸ் வேட்பாளர் கே.ஆர்.ராமசாமி ஆகியோரை ஆதரித்து வாக்கு சேகரித்தார்.
திமுக தேர்தல் அறிக்கையை ஜெராக்ஸ் எடுத்த அதிமுக
அவர் பேசுகையில், "தேர்தல் நேரத்தில் கலைஞர் என்னென்ன வாக்குறுதிகள் தந்தாரோ அதை நிறைவேற்றக்கூடியவர்.
2006-ல் தந்த வாக்குகளை நிறைவேற்றினார். தராத வாக்குறுதிகளையும் நிறைவேற்றினார். 108 ஆம்புலன்ஸ், மருத்துவ காப்பீட்டு திட்டம், கலைஞர் வீடு வழங்கும் திட்டம் போன்ற தராத வாக்குறுதிகளையும் அவர் நிறைவேற்றினார். அதன்படி 2011-ல் மீண்டும் ஆட்சி தொடரும் என்ற நம்பிக்கையோடு அவர் தேர்தல் அறிக்கை தயாரித்துள்ளார்.
அதில் நாங்கள் அடுத்த 5 ஆண்டு காலத்தில் என்னென்ன திட்டங்கள் நிறைவேற்றுவோம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தலைவர் கலைஞர் தேர்தல் அறிக்கை வெளியிட்ட பின்னர் அம்மையார் ஜெயலலிதாவும் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார்.
என்ன செய்துள்ளார் தெரியுமா? தலைவர் கலைஞரின் அறிக்கையை அப்படியே காப்பியடித்துள்ளார். அதை ஒரு ஜெராக்சாக எடுத்து வெளியிட்டுள்ளார். அத்துடன் மேலும் சிலவற்றை சொல்லி அதை செய்கிறேன், இதை செய்கிறேன் என்று கூறியுள்ளார்.
தேர்தல் நேரத்தில் பல உறுதிமொழிகளை அள்ளி வீசிவிட்டு தேர்தல் முடிந்த பின்பு கோடநாட்டுக்கு சென்று விடுவார் அம்மையார் ஜெயலலிதா. ஆனால் கலைஞர் எப்போதும் உங்களுக்காக உங்களுடன் நின்று பாடுபடக்கூடியவர். அச்சத்தில் ஜெயலலிதா புதிய, புதிய அறிக்கைகளை வெளியிட்டுள்ளார்.
வானத்தை கிழித்து வைகுண்டத்தை காட்டுவதுபோல, மணலை கயிறாக திரிப்பது போல, ஜெயலலிதா அறிக்கைகளை விட்டு விட்டு சென்றுவிடுவார். தலைவர் கருணாநிதி ஆட்சியின் சிறப்புக்கு சான்றாக 5 வருட ஆட்சி உள்ளது," என்றார்.
டெஸ்மா, எஸ்மா...
முன்னதாக திருப்புவனத்தில் மு.க.ஸ்டாலினுக்கு மாவட்ட தி.மு.க. துணை செயலாளர் சேங்கை மாறன் தலைமையில் பிரமாண்டமான வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் சிவகங்கை அரண்மனை வாசலில் நடைபெற்ற கூட்டத்தில் காங்கிரஸ் வேட்பாளர் ராஜசேகரனை ஆதரித்து மு.க.ஸ்டாலின் பேசுகையில், "
தமிழகத்தில் குடிசை வீடுகளை கான்கீரிட் வீடுகளாக மாற்றும் திட்டத்தில் 25 லட்சம் வீடுகள் தேர்வு செய்யப்பட்டு, முதல் கட்டமாக 3 லட்சம் வீடு கட்ட முடிவு செய்யப்பட்டது. இன்னும் 15 நாட்களில் அந்த வீடு கட்டி முடிக்கப்பட்டு கம்பீரமாக இருக்கும்.
தேர்தல் அறிக்கையில் கூறியதையெல்லாம் நீங்கள் உணர்ந்து உள்ளீர்கள். கலைஞர் தேர்தல் அறிக்கையை முழுமையாக ஏற்றுக்கொண்டுள்ளீர்கள் நீங்கள். ஆனால் ஜெயலலிதாவின் அறிக்கையில் அரசு ஊழியர்களுக்கு பல்வேறு சலுகைகளை செய்வோம் என்று அறிவித்துள்ளார். அரசு ஊழியர்களுக்கு என்னென்ன கொடுமைகள் நடந்துள்ளன.
அதையெல்லாம் அவர்கள் மறந்து இருப்பார்களா? எஸ்மா, டெஸ்மா என்ற கொடுமையான சட்டம், உரிமைக்காக போராடக்கூடாது என்ற சட்டம் இதையெல்லாம் நீங்கள் மறந்து இருப்பீர்கள் என்று நினைத்து நீலிக்கண்ணீர் வடிக்கும் வகையில் தேர்தல் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அவரது ஆட்சிகாலத்தில் நடந்த கொடுமைகள் ஒன்றா ரெண்டா... அம்மம்மா... அதையெல்லாம் அரசு ஊழியர்கள், சத்துணவு ஊழியர்கள், மக்கள் நலப்பணியாளர்கள், ஆசிரியர்கள் மறந்து இருப்பார்கள் என்று நினைக்கிறார். தமிழகத்தில் உங்களுக்கு நன்மை நடக்க வேண்டும் என்றால், தமிழகம் முன்னேற வேண்டுமென்றால் கலைஞர் ஆட்சி உருவாக நீங்கள் துணை நிற்கவேண்டும்", என்றார்.