டயர் விலையை உயர்த்தியது அப்போலோ!
டெல்லி: டயர்களின் விலையை 6 சதவீதம் உயர்த்தியுள்ளது முன்னணி டயர் தயாரிப்பு நிறுவனமான அப்போலோ டயர்ஸ்.
பல்வேறு மோட்டார் வாகனங்களின் டயர்கள் விலை கடுமையாக உயர்ந்துள்ளன. குறிப்பாக இருசக்கர மோட்டார்களின் டயர் விலை கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு இரு மடங்காக உயர்ந்துள்ளது.
இந்த நிலையில் இந்திய டயர் சந்தையில் முன்னணி உற்பத்தியாளராகத் திகழும் அப்போலோ டயர்ஸ், தனது அனைத்து வகை டயர்களுக்கும் விலையை உயர்த்தியுள்ளது.
மூலப் பொருள்களின் விலையில் கடுமையான உயர்வு ஏற்பட்டுள்ளதால், குறைந்தபட்சம் 10 சதவீதமாவது விலையை உயர்த்த வேண்டிய கட்டாயம் உள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
"அடுத்த நிதியாண்டின் (ஏப்ரல் 1 முதல்) முதல் காலாண்டில் வணிக வாகனங்களின் டயர் விலை 3 சதவீதமும், பஸ் மற்றும் ட்ரக்குகளின் ரேடியல் டயர்கள் விலை 6 சதவீதமும் உயர்த்தப்படும். கார் டயர்களைப் பொறுத்தவரை, கடந்த பிப்ரவரியில் 3 சதவீத விலை உயர்வை செய்துவிட்டோம். இந்த காலாண்டில் மேலும் 3 சதவீத விலை உயர்வு செய்யப்படும். தேவைப்பட்டால், அடுத்தடுத்த காலாண்டுகளில் மேலும் விலை உயர்த்தப்படும்," என்றார் அப்போலோ டயர் நிறுவன தலைவர் சதீஷ் சர்மா.
இப்போதைய நிலவரப்படி, பயணிகள் வாகன டயர்கள் விலை குறைந்தபட்சம் ரூ 2150 முதல் அதிகபட்சம் ரூ12500 வரை விற்கப்படுகிறது. ரேடியல் டயர்கள் ரூ 19900 முதல் 20200 வரை விற்பனையாகின்றன.
சர்வதேச அளவில் குட் இயர், பிரிட்ஜ்ஸ்டோன் போன்ற நிறுவனங்கள் 20 சதவீதம் வரை விலையை உயர்த்தியுள்ளன.