சாலையில் போகும் கருணாநிதி, ஹெலிகாப்டரில் பறக்கும் ஜெ.: மு.க.ஸ்டாலின்
தூத்துக்குடி: இந்த வயதிலும் கருணாநிதி சாலை வழியாக பயணம் செய்து மக்களை சந்திக்கிறார். ஆனால் ஜெயலலிதாவோ மக்களை சந்திக்க விரும்பாததால் ஹெலிகாப்டரில் பறக்கிறார் என்று துணை முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் போட்டியிடும் திமுக வேட்பாளர்களை ஆதரித்து துணை முதல்வர் பிரசாரம் செய்தார்.
அப்போது அவர் பேசியதாவது,
கலைஞர் சொன்னதைச் செய்வார், செய்வதைத் தான் சொல்வார். கலைஞர் ஆட்சி தொடர்ந்தால் தான் மக்களுக்கு இலவச டி.வி., இலவச கேஸ் அடுப்பு, கலைஞர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் மருத்துவ உதவிகள், கிரைண்டர், மிக்சி, இலவச காங்கிரீட் வீடுகள் ஆகியவை கிடைக்கும்.
இப்படி பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுததியதோடு நின்றுவிடாமல் 2011-ம் ஆண்டு தேர்தல் அறிக்கையில் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு வழங்கப்படும் கடன் தொகையை ரூ.4 லட்சமாக உயர்த்தியுள்ளார். அதில் ரூ.2 லட்சம் மானியமாக வழங்கப்படும் என்றும், முதல் தலைமுறை பட்டதாரிகளுக்கு அரசுப் பணிகளில் முன்னுரிமை அளிக்கப்படும் என்றும் அறிவித்துள்ளார்.
இதுதவிர அரசு பெண் ஊழியர்களுக்கு மகப்பேறு விடுப்பு 4 மாதங்கள் என்றும், 58 வயதானவர்களுக்கு இலவச பஸ் பாஸ், ஏழை மீனவர்களுக்கு புதிய காப்பீட்டுத் திட்டம், பள்ளி மாணவர்களுக்கு 3 சீருடைகள், முதியோர் உதவித் தொகை ரூ.750 ஆக உயர்வு, திருமண நிதி உதவி ரூ.30 ஆயிரமாக உயர்வு, ஏழைகளுக்கு 35 கிலோ அரிசி இலவசம், அனைத்து மாணவர்களுக்கும் இலவச லேப்டாப்.
தாய்மார்களுக்கு கிரைண்டர், மிக்சி, மாவட்டந்தோறும் நர்சிங் மற்றும் மருத்துவ கல்லூரிகள், விசைப்படகு மீனவர்களுக்கு 2 ஆயிரம் லிட்டர் டீசல், நாட்டுப் படகு மீனவர்களுக்கு 500 லிட்டர் மண்ணெண்ணெய், அரசு அலுவலர்களின் குறைகள் களைய நிரந்தர ஆணையம். இவ்வாறு பல்வேறு திட்டங்களை தமிழக மக்கள் நலம் பெற செயல்படுத்தவிருப்பதாக தேர்தல் அறிக்கையில் கலைஞர் தெரிவித்துள்ளார்.
அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா தானாக சிந்தித்து தேர்தல் அறிக்கை தயாரிக்காமல், அவசரத்தில் திமுக தேர்தல் அறி்க்கையை காப்பியடித்து வெளியிட்டுள்ளார். தேர்தல் நேரத்தில் கூட சாலை வழியாகச் சென்று மக்களை சந்திக்க விரும்பாததால் மீண்டும் ஹெலிகாப்டரில் பறக்கிறார். ஆனால் கலைஞரோ இந்த வயதிலும் சாலை வழியாகவே சென்று மக்களை சந்திக்கிறார்.
அதிமுக கூட்டணியில் புதிதாக சேர்ந்துள்ள முன்னாள் கதாநாயகன் வாயக்கு வந்ததை எல்லாம் பேசுகிறார். இந்த முன்னாள் கதாநாயகியையும், கதாநாயகனையும் தமிழக மக்கள் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள்.
தூத்துக்குடி மாவட்டத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம், மருத்துவக் கல்லூரி, கப்பல் ஓட்டிய தமிழன் வ.உ.சிதரம்பரனாருக்கு நினைவு இல்லம், பாரதியாருக்கு நினைவு இல்லம், சுதந்திரப் போராட்ட வீரர் வெள்ளையத் தேவனுக்கு மணிமண்டபம், வீரன் சுந்தரலிங்கத்துக்கு மணிமண்டபம், இஸ்லாமிய புலவர் உமறுப்புலவருக்கு மணிமண்டபம் அமைத்து தந்தது கலைஞர் தான். தூத்துக்குடியில் அரசு பொறியியல் கல்லூரியும் அமைத்துள்ளார்.
தூத்துக்குடி நகரை மாநகராட்சியாக உயர்த்தியவரும், பக்கிள் ஓடையை சீரமைத்தவரும் அவர் தான். இவவாறு பல சாதனைகள் புரிந்துள்ள இந்த நல்லாட்சி தொடர திமுக கூட்டணி வேட்பாளர்களுக்கு வாக்களியுங்கள் என்றார்.












Click it and Unblock the Notifications