தமிழக மக்கள் ஒருபோதம் கூட்டணி ஆட்சியை ஆதரிக்க மாட்டார்கள்-ஜெ.
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வந்த ஜெயலலிதா நேற்று இரவு சென்னை திரும்பினார். விரைவில் அவர் அடுத்த கட்ட பிரசாரத்தைத் தொடங்கவுள்ளார்.
சென்னை திரும்பிய அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், தமிழக மக்கள் கூட்டணி ஆட்சிக்கு ஒருபோதும் ஆதரவு தெரிவிக்க மாட்டார்கள். எனவே அதுகுறித்த கேள்விக்கே இடமில்லை.
எனது தேர்தல் பிரசாரக் கூட்டங்களில், இலவசத் திட்டங்கள், கருணாநிதி குடும்பத்தின் அட்டகாசம், ஊழல் ஆகியவை குறித்துதான் நான் பிரதானமாக பேசி வருகிறேன்.
கருணாநிதியின் குடும்ப ஆட்சியால் மக்கள் கடும் வெறுப்படைந்துள்ளனர். இந்த குடும்ப ஆட்சியை வரும் தேர்தலோடுதூக்கி எறிய அவர்கள் முடிவெடுத்து விட்டனர். இது வரும் தேர்தல் முடிவுகளில் தெரிய வரும்.
திமுக ஆட்சியை அகற்ற வேண்டும், கருணாநிதி குடும்பத்தில் சிக்கியுள்ள தமிழகத்தை மீட்க வேண்டும், கருணாநிதி குடும்பத்தை அரசியலே விட்டு விரட்ட வேண்டும் என்பதில்தான் எனது முழுக் கவனமும் உள்ளது. இதை மையமாக வைத்தே நான் பிரசாரம் செய்து வருகிறேன்.
நான் 40 நாட்களுக்கு பிரசாரம் செய்ய முதலில் திட்டமிட்டிருந்தேன். கூட்டணிக் கட்சிகளின் தலைவர்களோடு இணைந்தும் பிரசாரக் கூட்டத்தில் பேசவும் திட்டமிட்டிருந்தேன். ஆனால் திடீரென தேர்தல் ஆணையம் ஏப்ரல் 13ம் தேதி தேர்தல் நடைபெறும் எனக் கூறி விட்டதால், அது இயலாமல் போய் விட்டது. இருப்பினும் ஒவ்வொரு தலைவரும் ஒரு பகுதியில் பிரசாரம் செய்வது என முடிவெடுத்து அதன் படி நடந்து வருகிறது என்றார் ஜெயலலிதா.