தொங்கு சட்டசபை வராது, அதிமுக 218 இடங்களில் வெல்லும்-ஜெ
சென்னை: தமிழகத்தில் தொங்கு சட்டசபை ஏற்படுவதற்கு வாய்ப்பில்லை என்றும், 218க்கும் மேற்பட்ட இடங்களில் அதிமுக கூட்டணி வெற்றி பெற்று தனித்து ஆட்சி அமைக்கும் என்றும் அக் கட்சியின் பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறினார்.
தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுவதற்காக போயஸ் கார்டனில் இருந்து வெளியே வந்த ஜெயலலிதா அளித்த பேட்டி:
கேள்வி: கருத்துக் கணிப்புகளில் எல்லாம் அதிமுக வெற்றி பெறும் என்று கூறப்படுகிறதே?
பதில்: கருத்துக் கணிப்பில் அதிமுக வெற்றி பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது.
கேள்வி: 164 இடங்களில் அதிமுக கூட்டணி வெற்றி பெறும் என்று ஒரு கருத்துக் கணிப்பில் கூறப்பட்டுள்ளதே?
பதில்: எனது சொந்த கணிப்பின்படி அதிமுக கூட்டணி 218 இடங்களுக்கு குறையாமல் வெற்றி பெறும். எனவே தொங்கு சட்டசபை ஏற்பட வாய்ப்பில்லை. அதிமுக தனித்தே ஆட்சி அமைக்கும்.
கேள்வி: தேர்தல் ஆணையத்தின் கெடுபிடி நடவடிக்கையால், தமிழ்நாட்டில் அறிவிக்கப்படாத எமர்ஜென்சி போல் உள்ளது என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளாரே?
பதில்: கருணாநிதி ஆட்சிதான் உண்மையான எமர்ஜென்சி.
கேள்வி: தேர்தல் ஆணையம் ஏராளமான கெடுபிடியுடன் செயல்படுவதாக கூறப்படுகிறதே?
பதில்: மிக நீண்ட காலத்திற்கு பிறகு தேர்தல் நடத்தை விதிமுறைகளை, தேர்தல் ஆணையம் அமல்படுத்துவதில் தீவிரமாகவும், உறுதியாகவும், முனைப்புடன் செயல்படுவதாக தெரிகிறது. இதை இதயபூர்வமாக வரவேற்கிறேன்.
கேள்வி: விஜயகாந்த் தேர்தல் பிரசாரத்தின்போது தனது கட்சி வேட்பாளரை அடித்துள்ளாரே? அதுமட்டுமல்லாமல், அதிமுக கொடியை கீழே இறக்கும்படி கூறியிருக்கிறாரே?
பதில்: மன்னிக்கவும். தேர்தல் பிரசாரத்துக்கு நேரமாகிவிட்டது. நான் கிளம்புறேன்.
இவ்வாறு ஜெயலலிதா பேட்டியளித்தார்.
இன்று கன்னியாகுமரி, நெல்லையில் ஜெ பிரசாரம்:
இந் நிலையில் ஜெயலலிதா இன்று குமரி, நெல்லை மாவட்டங்களில் தனது கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்யவிருக்கிறார்.
நெல்லை மாவட்டத்தில் 6 தொகுதிகளிலும், கன்னியாகுமரி மாவட்டத்தில் 4 தொகுதிகளிலும் அதிமுக போட்டியிடுகிறது. நெல்லை, குமரி மாவட்டங்களில் அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து அதிமுக பொது செயலாளர் ஜெயலலிதா இன்றும் நாளையும் பிரசாரம் செய்கிறார்.
இதற்காக அவர் இன்று சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் பிற்பகல் 2 மணிக்கு தூத்துக்குடி விமான நிலையம் வநதடைகிறார். அங்கிருந்து கன்னியாகுமரி அரசு விருந்தினர் மாளிகைக்கு ஹெலிகாப்டரில் செல்கிறார். இதையடுத்து பிரசார வேனில் சென்று கன்னியாகுமரி தொகுதி வேட்பாளர் பச்சைமாலை ஆதரித்து பேசுகிறார்.
பின்னர் நாகர்கோவில் நாகராஜா திடலில் அந்த தொகுதி அதி்முக வேட்பாளர் நாஞ்சில் முருகேசனை ஆதரித்து பிரசாரம் செய்கிறார். அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் குளச்சல் செல்லும் அவர் அந்த தொகுதி அதிமுக வேட்பாளர் லாரன்ஸ், கிள்ளியூர் தொகுதி அதிமுக வேட்பாளர் ஜார்ஜ் ஆகியோரை ஆதரித்து பேசுகிறார். பின்னர் குளச்சலில் இருந்து ஹெலிகாப்டரில் புறப்படும் ஜெயலிலதா மாலை 5.30 மணிக்கு நெல்லை ஆயுதப்படை மைதானம் வருகிறார்.
அங்கிருந்து காரில் புறப்பட்டு 5.45 மணிக்கு நெல்லை டவுன் வாகையடி முனை வருகிறார். அங்கு நெல்லை தொகுதி வேட்பாளர் நயினார் நாகேந்திரனை ஆதரித்து பேசுகிறார். இத்துடன் தனது முதல் நாள் பிராரத்தை முடித்து கொண்டு மகாராஜா நகரில் உள்ள நயினார் நாகேந்திரன் வீ்ட்டில் தங்குகிறார்.
வரும் 3-ம் தேதி பிற்பகல் 2 மணிக்கு மாகாராஜா நகரில் இருந்து புறப்படும் ஜெயலலிதா பாளை ஆயுதப்படை மைதானம் வருகிறார். அங்கிருந்து ஹெலிகாப்டரில் புறப்பட்டு அம்பாசமுத்திரம் செல்கிறார். அம்பை தொகுதி அதிமுக வேட்பாளரை ஆதரித்து பேசுகிறார். அத்துடன் தனது நெல்லை மாவட்ட பிரசாரத்தை முடித்து கொண்டு அம்பையில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் சிவகாசி செல்கிறார். ஜெயலலிதா வருகையையொட்டி நெல்லையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.












Click it and Unblock the Notifications