வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவிப்பு: அமைச்சர் சுரேஷ் ராஜனுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் !
மதுரை : தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் சுரேஷ் ராஜன் வருவாய்க்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக தொடரப்பட்ட வழக்கில், அவரை விடுவித்து மதுரை உயர்நீதிமன்ற கிளை பிறப்பித்த உத்தரவை எதிர்த்து, உச்சநீதிமன்றத்தில் அப்பீல் செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பாக, தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
தமிழக சுற்றுலாத்துறை அமைச்சராக உள்ள சுரேஷ் ராஜன், கடந்த 2001 ம் ஆண்டு மே 14 ம் தேதி, தனது தாயார் உள்பட உறவினர்கள் இருவர் பெயரில், 17.20 லட்ச ரூபாய்க்கு சொத்து வாங்கினார்.
இந்த நிலையில், வருமானத்திற்கு அதிகமாக அமைச்சர் சுரேஷ் ராஜன் சொத்து சேர்த்ததாகக் கூறி வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கில் சுரேஷ் ராஜனும், மற்ற இரண்டு பேரும் 2010 டிசம்பர் 10 ம் தேதி விடுதலை செய்யப்பட்டனர். சென்னை உயர் நீதி மன்றத்தின் இந்தத் தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு அப்பீல் செய்ய முன்வரவில்லை.
இந்த நிலையில், அ.தி.மு.க., சட்டப்பிரிவைச் சேர்ந்த பாலா என்பவர், சுரேஷ்ராஜனை விடுவித்து சென்னை உயர் நீதி மன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்து, உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார்.
இந்த மனுவை விசாரணைக்கு ஏற்றுக் கொண்ட நீதிபதிகள் சுதர்சன் ரெட்டி, எஸ்.எஸ். நிஜார் ஆகியோர் இது தொடர்பாக விளக்கம் கேட்டு தமிழக அரசுக்கும், அமைச்சசர் சுரேஷ்ராஜனுக்கும் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர்.