ஓட்டு எந்திரங்கள்-பாதுகாப்புப் பணியில் கூடுதல் படையினர்
சென்னை: சென்னையில் ஓட்டு எண்ணும் இடங்களில் மேலும் 10 கம்பெனி துணை ராணுவப் படையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடவுள்ளனர். அதே போல மாநில அரசு அதிகாரிகளும் இந்த மையங்களில் கண்காணிப்புப் பணியில் ஈடுபட வேண்டும் என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
சென்னையில் உள்ள 16 சட்டசபைத் தொகுதிகளுக்கான வாக்குப் பதிவு எந்திரங்கள் ராணி மேரிக் கல்லூரி, லயோலா கல்லூரி, அண்ணா பல்கலைக்கழகம் ஆகிய இடங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. மே 13ம் தேதிதான் ஓட்டு எண்ணிக்கை நடைபெறுவதால் இந்த இடங்களில் மிக பலத்த 4 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ஓட்டுப்பெட்டி உள்ள அறைக்கதவு அருகே எல்லைப் பாதுகாப்பு படை வீரர்கள் காவலுக்கு நிறுத்தப்பட்டுள்ளனர். 2வது அடுக்கில் தமிழ்நாடு சிறப்பு காவல் படை போலீசாரும், 3வது அடுக்கில் ஆயுதப் படை போலீசாரும், 4வது அடுக்கில் அந்தப் பகுதி காவல் நிலைய போலீசாரும் பாதுகாப்பு பணியில் உள்ளனர்.
ஒவ்வொரு மையத்திலும் 3 உதவி கமிஷனர்கள், 7 இன்ஸ்பெக்டர்கள், 20 சப்-இன்ஸ்பெக்டர்கள், 36 தமிழ்நாடு சிறப்பு காவல் படை போலீசார், 40 ஆயுதப்படை போலீசார், 50 உள்ளூர் போலீசாருடன் 100 எல்லை பாதுகாப்பு படை வீரர்களும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதற்காக 17 கம்பெனி எல்லைப் பாதுகாப்புப் படையினர் சென்னையில் முகாமிட்டு 3 ஷிப்டுகளாக 24 மணி நேர பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர். இந் நிலையில் தற்போது கூடுதலாக மேலும் 10 கம்பெனி எல்லை பாதுகாப்பு படையினர் சென்னை வாக்குப் பதிவு எந்திரங்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.இதற்கிடையே ஓட்டு எண்ணிக்கை மையங்களில் மாவட்ட அளவிலான அதிகாரிகளும் தினமும் கண்காணிப்பு பணியில் ஈடுபட வேண்டும் என தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது.
மாவட்ட மகளிர் திட்ட ஊழியர்கள், ஊரக வளர்ச்சித் திட்ட அலுவலர்கள், கூட்டுறவு இணைப் பதிவாளர்கள், கால்நடை, விவசாயத்துறைகளின் இணை இயக்குனர்கள், ஊராட்சி உதவி இயக்குனர்கள், கலெக்டர்களி்ன் நேர்முக உதவியாளர்கள் ஆகியோரும் ஓட்டு எண்ணிக்கை மையங்களை தினமும் சுற்றி வந்து கண்காணிக்க தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது.
ஒவ்வொரு அதிகாரியும் 12 மணி நேர ஷிப்டுகளில் கண்காணிப்புப் பணியில் ஈடுபட வேண்டு்ம் என்றும் தவறுகள் நடந்தால் அன்று பணியில் இருக்கும் அதிகாரிகளே பொறுப்பு என்றும் உத்தரவிட்டுள்ளது.