இலங்கை கடற்படையால் கொல்லப்பட்ட 4 மீனவர்களின் குடும்பத்துக்கு ஜெ. தலா ரூ. 1 லட்சம் நிதி
ராமநாதபுரம்: இலங்கை கடற்படையால் கடத்திச் செல்லப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்ட 4 தமிழக மீனவர்களின் குடும்பங்களுக்கு அதிமுக சார்பில் தலா ரூ. 1 லட்சம் நிதி உதவி வழங்கப்பட்டது.
கடந்த 2-ம் தேதி இராமநாதபுரம் மாவட்டம் தங்கச்சிமடத்தைச் சேர்ந்த மீனவர்கள் விக்டர், ஜான் பால், அந்தோணிராஜ் மற்றும் மாரிமுத்து ஆகியோர் கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றனர். சென்றவர்கள் சென்றவர்கள் தான். கரை திரும்பவேயில்லை. இந்நிலையில் அவர்கள் 4 பேரையும் இலங்கை கடற்படை கடத்திச் சென்று கொடூரமான முறையில் கொலை செய்து உடல்களை கடலில் வீசியது.
அந்த 4 பேரின் உடல்கள் கால் இன்றியும், தலையின்றியும் கரை ஒதுங்கியது. இந்த கொடூரச் செயலுக்கு அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கடும் கண்டனம் தெரிவித்து இரங்கல் செய்தி வெளியிட்டிருந்தார்.
இலங்கை கடற்படையால் கொல்லப்பட்ட மண்டபம் ஒன்றியம், தங்கச்சிமடம் ஊராட்சியைச் சேர்ந்த விக்டர், ஜான் பால், அந்தோணிராஜ், மாரிமுத்து ஆகியோருடைய இல்லத்திற்கு, அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா சார்பில் அதிமுக மீனவர் பிரிவுச் செயலாளர் கே. கே. கலைமணி, மீனவர் பிரிவு இணைச் செயலாளர் ஜெனிபர் சந்திரன், வட சென்னை மாவட்டச் செயலாளர் டி. ஜெயக்குமார் எம்.எல்.ஏ. ஆகியோர் நேரில் சென்று, அவர்களது குடும்பத்தினரிடம் தலா ரூ. 1 லட்சம் வழங்கி ஆறுதல் கூறினர்.