மேற்கு வங்கத்தில் 75 தொகுதிகளில் நாளை 3வது கட்ட தேர்தல்
கொல்கத்தா: மேற்கு வங்க சட்டமன்றத்துக்கு நாளை 3வது கட்டமாக 75 தொகுதிகளில் தேர்தல் நடைபெறுகிறது.
மேற்கு வங்க சட்டமன்றத்துக்கு இதுவரை 2 கட்டங்களாக தேர்தல்கள் நடந்து முடிந்துள்ளன. நாளை 3 மாவட்டங்களைச் சேர்ந்த 75 தொகுதிகளில் தேர்தல் நடைபெறுகிறது.
3வது கட்ட தேர்தலில் 1.44 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். இந்த தேர்தலையொட்டி மிக பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மூன்றாம் கட்ட தேர்தலுக்காக மொத்தம் 17,792 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.
நாளை தேர்தல் நடைபெறும் 75 தொகுதிகளில் 11 தொகுதிகள் கொல்கத்தா மாவட்டத்திலும், 33 தொகுதிகள் 24 வடக்கு பர்க்கானாக்கள் மாவட்டத்திலும், 31 தொகுதிகள் தெற்கு 24 பர்க்கானாக்கள் மாவட்டத்திலும் அடங்கியுள்ளன.
இந்த 75 தொகுதிகள் அடங்கிய பகுதிகளில் நேற்று மாலை 5 மணியுடன் பிரசாரம் முடிவடைந்தது.
அடுத்து மே 3ம் தேதி 4வது கட்ட தேர்தலும், மே 7ம் தேதி 5வது கட்ட தேர்தலும், மே 10ம் தேதி 6வது கட்ட தேர்தலும் நடக்கிறது.
இதைத் தொடர்ந்து 13ம் தேதி தமிழகம், புதுச்சேரி, அஸ்ஸாம், கேரளா மற்றும் மேற்கு வங்க மாநிலத்தின் வாக்கு எண்ணிக்கை நடக்கவுள்ளது.