மரபணு மாற்றப்பட்ட கத்தரிக்காக்கு ராமதாஸ் கடும் எதிர்ப்பு
சென்னை: உலகமே இயற்கை வேளாண்மைக்கு மாறிவரும் நிலையில், இந்தியாவில் மரபணு மாற்றம் செய்யப்பட்ட கத்தரிக்காய் அறிமுகப்படுத்துவதை மத்திய அரசு தடுத்து நிறுத்தவேண்டும் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மரபணு மாற்றப்பட்ட கத்தரிக்காயால் மக்களின் உடல் நலனுக்கும், வேளாண் நிலங்களுக்கும் பெரும் தீங்கு ஏற்படும் என்று பல்வேறு தரப்பினரும் குரல் கொடுத்ததையடுத்து இந்த வகை கத்தரிக் காய்க்கு தடை விதிக்கப்படும் என்று மத்திய அரசு கடந்த ஆண்டு அறிவித்திருந்தது. இது தொடர்பாக முழுமையான ஆராய்ச்சி நடத்தப்பட்டு பொது மக்களுக்கோ அல்லது வேளாண் நிலங்களுக்கோ எந்தவிதப் பாதிப்பும் ஏற்படாது என்று உறுதி செய்யப்பட்ட பிறகுதான் மரபணு மாற்றம் செய்யப்பட்ட கத்தரிக்காய்க்கு அனுமதி அளிக்கப்படும் என்று மத்திய சூற்றுச்சூழல் அமைச்சர் ஜெயராம் ரமேஷ் கூறியிருந்தார்.
அதன்பின் கடந்த ஒரு வருடத்துக்கும் மேலாக இதுதொடர்பாக எந்த ஆய்வும் நடத்தப்படாத நிலையில், ஏற்கனவே செய்யப்பட்ட ஆய்வுகளே போதுமானது என்று கூறி மரபணு கத்தரிக்காய்க்கு அனுமதி அளிக்க மத்திய அரசின் வல்லுநர் குழு முடிவு செய்திருப்பதாக வந்துள்ள செய்தி அதிர்ச்சி அளிக்கிறது.
இயற்கைக்கும் மரபுக்கும் எதிரான இந்தக் கத்தரிக்காயை எக் காரணத்தைக் கொண்டும் அனுமதிக்கக் கூடாது. வேளாண் விளைச்சலை அதிகரிக்கவும் கத்தரிக்காயை பூச்சிக் கொல்லி தாக்குவதை தடுக்கவும் மரபணு மாற்ற கத்தரிக்காயை அறிமுகப்படுத்துவதாக கூறவதை ஏற்றுக்கொள்ள முடியாது.
விளைச்சலை அதிகரிப்பதற்காக பொதுமக்களின் உடல் நலனுக்கு தீங்கு ஏற்பட அனுமதிப்பதென்பது கொள்ளிக்கட்டையை எடுத்து தலையை சொரிந்து கொள்வதற்கு சமமானதாகவே அமையும்.
வேளாண் விளைச்சலை பெருக்க எத்தனையோ வழிமுறைகள் உள்ளன. வேளாண் நிலங்கள் வீட்டு மனைகளாக மாற்றப்படுவதை தடுக்கலாம் - மண் பரிசோதனை செய்து அதற்கேற்ற உரங்களை பரிந்துரைக்கலாம். இவற்றையெல்லாம் விட்டுவிட்டு வேளாண் விளைச்சலை அதிகரிக்கும் முயற்சி என்ற பெயரில் மரபணு மாற்றம் செய்யப்பட்ட கத்தரிக்காய்க்கு அனுமதி வழங்குவதென்பது, இந்திய விவசாயிகளின் நலனை புறக்கணித்துவிட்டு பன்னாட்டு நிறுவனங்களுக்கு வெண்சாமரம் வீசும் செயலாகவே இருக்கும்.
உலகமே இயற்கை வேளாண்மைக்கு மாறிவரும் நிலையில், இந்தியாவில் மரபணு மாற்றம் செய்யப்பட்ட கத்தரிக்காய் அறிமுகப்படுத்தப்படுவதை மத்திய அரசு தடுத்து நிறுத்த வேண்டும் என்று அதில் கூறியுள்ளார் ராமதாஸ்.












Click it and Unblock the Notifications