திமுக தோல்வியால் கூட்டணியில் மாற்றமில்லை-காங்கிரஸ்
டெல்லி: தமிழகத்தில் திமுக- காங்கிரஸ் கூட்டணிக்கு கிடைத்துள்ள தேர்தல் தோல்வியால் கூட்டணியில் எந்த மாற்றமும் ஏற்படாது. திமுக - காங்கிரஸ் உறவு தொடரும் என்றார் காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ஜெயந்தி நடராஜன்.
தமிழக தேர்தல் முடிவு குறித்து, அகில இந்திய காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ஜெயந்தி நடராஜன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
அவர் கூறுகையில், தமிழக சட்டசபை தேர்தலில் வாக்காளர்கள் அளித்துள்ள தீர்ப்பை காங்கிரஸ் கட்சி ஏற்றுக் கொள்கிறது. எங்கள் கூட்டணிக்கு ஏற்பட்டுள்ள தோல்வி குறித்து ஆராயப்படும். அடுத்து வரும் தேர்தல்களில் வெற்றி பெற முயற்சி செய்வோம். தேர்தலில் வென்று ஆட்சியைப் பிடித்துள்ள அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதாவுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.
திமுக எங்கள் கூட்டணியில் உள்ளது. தேர்தல் தோல்விக்காக எங்கள் கூட்டணியை விட்டு விட இயலாது. திமுகவை நாங்கள் ஒரு போதும் விலக்க மாட்டோம். திமுகவுடன் கூட்டணி நீடிக்கும்என்றார்.
திமுக-காங்கிரஸ் கூட்டணி தோல்விக்கு ஆளும் கட்சியின் எதிர்ப்பு அலையே காரணம் என்று மத்திய அமைச்சரும் தமிழக காங்கிரஸ் பொறுப்பாளருமான குலாம்நபி ஆசாத் தெரிவித்துள்ளார்.
அவர் கூறுகையில், எதிர்க்கட்சியாக இருந்த அதிமுக ஆட்சிக்கு வர திமுகவுக்கு எதிரான அலையே காரணமாக அமைந்துவிட்டது. தமிழ்நாடு, பஞ்சாப், கேரளா போன்ற மாநிலங்களில் எந்த கட்சியும் அடுத்தடுத்து வென்றதில்லை. அரசு அமைப்பதில் எப்போதுமே மாற்றம் உள்ளது. இம்முறையும் ஆட்சியில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.
ஆளும் கட்சியின் எதிர்ப்பு நிலை பெறும் பங்கு வகிக்கிறது. கடந்த தேர்தலில் திமுக ஆட்சிக்கு வர அது காரணமாக இருந்தது. இந்த முறை அதுவே அதிமுக ஆட்சிக்கு வர காரணமாகி விட்டது. இந்த மாற்றம் தொடரும் என்றார்.
திமுக விசுவாசமான தோழமையான கட்சி-சரத்பவார்:
தமிழ்நாடு சட்டசபை தேர்தலில் திமுக தோல்வி அடைந்து விட்டாலும், திமுக அமைச்சர்கள் மத்திய ஆட்சியில் நீடிப்பதில் எந்த பிரச்சினையும் இல்லை என்று தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவரும், மத்திய அமைச்சர் சரத்பவார் கூறினார்.
அவர் கூறுகையில், தேர்தல் முடிவுகள் எதிர்பார்த்த மாதிரி தான் வந்து உள்ளன. திமுக விசுவாசமான தோழமையான கட்சி. அதன் மந்திரிகள் மத்திய ஆட்சியில் நீடிப்பதில் எந்த பிரச்சினையும் கிடையாது. அது தோல்வி அடைந்ததற்கு ஸ்பெக்ட்ரம் விவகாரம் காரணமில்லை. அந்த மாநில மக்கள் மாற்றம் வேண்டும் என்று கருதித்தான் திமுகவை தோற்கடித்து இருக்கிறார்கள்.
மேற்கு வங்காள மாநிலத்தில் மம்தா பெற்ற வெற்றி சரித்திர முக்கியத்துவம் வாய்ந்தது. முன்னேற்றத்துக்காக போடப்பட்ட ஓட்டுகள் தான் மம்தாவுக்கு கிடைத்தது. அவரது கடும் உழைப்புக்கு பலன் கிடைத்துள்ளது என்றார்.












Click it and Unblock the Notifications