மகப்பேறு விடுப்புக் காலம் 6 மாதம்; ஜூன்-1 முதல் 20 கிலோ இலவச அரிசி-ஜெ உத்தரவு
முதல்வராகப் பொறுப்பேற்றவுடன் ஜெயலலிதா போட்ட முதல் கையெழுத்துகளில் ஒன்று இந்த இலவச அரிசித் திட்டமாகும். இந் நிலையில் கூட்டுறவு, உணவு வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை செயலாளர் ஸ்வரண் சிங் வெளியிட்டுள்ள உத்தரவில்,
அரிசி பெறத் தகுதியுடைய அனைத்து ரேஷன் அட்டைகளுக்கும் அந்தந்த குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப 12 முதல் 20 கிலோ வரை வழங்க வேண்டும். இதுகுறித்த அறிவிப்பை அனைத்து ரேஷன் கடைகளின் அறிவிப்புப் பலகைகளிலும் எழுதி வைக்க வேண்டும்.
ஜூன் 1ம் தேதி முதல் இந்தத் திட்டம் நடைமுறைக்கு வரும். இதேபோன்று, அந்தியோதயா அன்னயோஜனா திட்டத்தின் கீழ் வரும் ரேஷன் அட்டைகளுக்கும் 35 கிலோ இலவச அரிசி அளிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
6 மாதம் மகப்பேறு விடுப்புக் காலம்:
இந் நிலையில் முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள உத்தரவில், அரசு பெண் ஊழியர்களுக்கு மகப்பேறு விடுப்புக் காலம் மூன்று மாதங்களாக இருப்பதை 6 மாதங்களாக உயர்த்தப்பட்டுள்ளது.